பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
12:06
கடவுள் மற்றும் புராணக்கதை மாந்தர்களின் உருவங்களை மரப்பலகையில், தங்கத் தகடு இணைத்து வரையும், தஞ்சாவூர் ஓவியங்கள், சோழ மன்னர்களின் காலத்தில் மிகவும் பிரபலம். ஆரம்பத்தில் அரசரின், அரண்மனைகளை மட்டும் அலங்கரித்துக் கொண்டிருந்த இவ்வோவியங்களுக்கு உலகம் முழுவதிலும் மவுசு அதிகம்.
இருப்பினும் சமீப காலமாக, தஞ்சாவூர் ஓவியங்கள் மீதான ஆர்வம் நம்மிடையே குறைந்து வருகின்றன என்பதே உண்மை. இதற்கிடையில், கோவையை சேர்ந்த ஒருவருக்காக, 7 அடியில் பிரமாண்ட தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் பூங்கோதை. சிட்ரா, பூங்கோதை நகர் அருகே, சந்திவ் ஆர்ட் கேலரி நடத்தி வரும் இவர் நம்மிடம் பகிர்ந்தவை... சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம். ஆயில், அக்ரலிக், பேப்ரிக் பெயிண்டிங் என பலவகைகளையும் தொடர்ந்து கற்க ஆரம்பித்தேன். இருப்பினும் தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். பொதுவாக இவ்வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட மரத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். இந்த சட்டமும்கூட ஓவியத்தின் ஒரு பகுதிதான். அந்த அளவுக்கு கவனத்துடனும், கலை நேர்த்தியுடனும் சட்டங்களை உருவாக்குவோம்.
கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் குழுக்களாக ஒழுங்குடன் அமைந்திருக்கும். இதில் நளினம் மிகுந்து காணப்படும்; முரட்டுத்தனம் இருக்காது. உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். மாளிகையின் உட்புத்தையோ அல்லது கோவிலின் உள்சுற்றையோ பின்புலமாக கொண்டிருக்கும். ‘3டி எபெக்ஸ்’ விரும்புவோருக்கு கரவை கோந்து பயன்படுத்தி ‘எம்போஸ்’ செய்கிறோம். இறுதியாக, பார்டருக்கு, 24 காரட் தங்க தகடுகளை வெட்டி ஒட்டுகிறோம். இருண்ட அறையிலும் இவ்வகை ஓவியங்கள் ஒளிவீச இதுவே காரணம். முன்பெல்லாம், வெண்ணை உண்ணும் கிருஷ்ணன், ஆலிலைமேல் குழந்தை கிருஷ்ணன், ராமர் பட்டாபிசேகம், கோமாதா உள்ளிட்ட ஓவியங்கள்தான் அதிகளவில் தஞ்சாவூர் பெயிண்டிங்கில் இடம்பெறும். இன்று பல்வேறு கடவுள்கள் உட்பட ஒவ்வொருவரின் ரசனைக்கேற்பவும் தஞ்சாவூர் பெயண்டிங் உருவாக்கப்படுகின்றன. அதேபோல் பெரிய அளவில் மட்டுமே வரையப்பட்ட இவ்ஓவியங்கள் சிறு அளவிலும் கிடைக்கின்றன.
குறைந்தபட்சம், 1,250 முதல் 4 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்துள்ளேன். விரும்புவோருக்கு வகுப்பு எடுத்தும் வருகிறேன்,’’ என்றார். ‘மாடர்ன் ஆர்ட், அப்ஸ்டிரேக் பெயிண்டிங், அக்ரலிக்...’ இப்படியான நவீன ஓவியங்களுக்கு மத்தியில், தமிழரின் பாரம்பரியமான தஞ்சாவூர் ஓவியங்களை, தனது அரிய படைப்புகளால் மீட்டெடுத்து வரும் பூங்கோதையின் கலைப்பணி தொடரட்டும்!