திருப்பதி: தற்போது உள்ள கட்டண நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை என காளஹஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் கோவில்களில் உள்ள தரிசன கட்டணங்கள், பிரசாதங்களின் விலை, வாடகை அறை கட்டணம் உள்ளிட்டவை உயரும் என கூறப்படுகிறது. இந் நிலையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், புதிய வரிவிதிகளின்படி கட்டண உயர்வு குறித்து எந்த தகவலும் உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.