உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டம் எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2017 11:07
தேவதானப்பட்டி: குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் புதிய தேர் சக்கரம் பொருத்தப்பட்டது. வெள்ளோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் உத்தண்ட சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள், பூர்ணாம்பாள், புஷ்பாதாயம்பாள் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா 10 நாள் நடைபெறும். கோயிலுக்கு 30 ஏக்கா் வரை நிலம் உள்ளது.
அவை கிராம கட்டுப்பாட்டில் இருந்த வரை குத்தகைப்பணம் வசூல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டது. தற்போது சித்ரா பவுர்ணமி, தை முதல் தேதியில் உற்சவர் ஆற்றுக்கு சென்று அருள் பாலிக்கிறார். புதிய தேர்கட்டும் பணி இக்கோயிலில் புதிய தேர் கட்டுவதற்கு 2012ல் அரசு அனுமதி வழங்கியது. அரசு சார்பில் 14 லட்சம் ரூபாய், மக்கள் பங்களிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு தேர் கட்டும் பணி துவங்கியது. 5 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மாதம் தேருக்கு சக்கரம் பொருத்தப்பட்டது. இந்நிலையில் விழா காலங்களில் தேர் சென்று வரும் தெருக்களில் வெள்ளோட்டம் நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக எஞ்சிய அனைத்துப்பணிகளையும் முடிக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.