மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். வைணவர்கள் சுதர்சனரை சக்கரத்தாழ்வராகப் போற்றுவர். சில்ப ரத்தினம் எனும் நூல், சுதர்சனரை சக்கர ரூபி விஷ்ணு என்றே குறிப்பிடுகிறது. காஞ்சியும் திருக்குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்கு சிறப்பாக உரிய தலங்கள். வடக்கே குப்தர்கள் காலத்தில் சுதர்சனர் வழிபாடு சிறப்புற்று விளங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பயானா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குப்தர்கள் கால நாணயங்களில் சுதர்சன உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.