பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
12:07
ஈரோடு: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு மாவட்ட அம்மன் கோவில்களில் நடந்த, சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், கள்ளுக்கடை மேடு காளியம்மன் கோவில், கோட்டை பத்ரகாளியாம்மன் கோவில் உள்ளிட்ட மாநகரை சுற்றி யுள்ள அனைத்து கிராம அம்மன் கோவில்களிலும், நேற்று சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது. கள்ளுக்கடை மேடு காளியம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில், பெரிய மாரியம்மன் வெள்ளி கவசம், சூரம்பட்டி மாரியம்மன் சந்தன காப்பு, சத்திரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
*பவானி செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், ஓம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
* கோபி அருகே பாரியூரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் காலை முதலே, பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. உச்சி கால பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி குண்டத்தில், உப்பு கொட்டி, தீபமேற்றி வழிபட்டனர்.
*சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு, வாகைதொழுவு அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. சென்னிமலை டவுன் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைக்குப்பின், பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
*அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில், அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.