உடுமலை : ஆடி அமாவாசையை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்பதால் அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடத்துவதுடன், நீர்நிலைகளுக்குச்சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி உடுமலை திருமூர்த்தி அணையில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
300 லிட்டர் தீபம்: சோமவாரபட்டி மூவர் கண்டியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு எப்போதும் தீபம் எரிந்து கொண்டிருக்கும் வகையில், 300 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் அன்னதான குழு சார்பில் கொப்பரை தீபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீபம் ஏற்றும் வகையில், கொப்பரைக்கு அருகில் பெரிய பாத்திரத்தில் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது. இக்கொப்பரை தீபத்தை அணையவிடாமல் தொடர்ந்து எரிவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கோவிலர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதேபோன்று குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார், பூமிதேவி, திருமூர்த்தி நகர் வனதுர்க்கையம்மன் கோவில், போடிபட்டி பிரத்தியங்கிரா தேவி உட்பட சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.