பதிவு செய்த நாள்
02
ஆக
2017
12:08
உடுமலை : திருமூர்த்திமலையின் சிறப்புகள் அனைத்து தரப்பினருக்கும் தெரியவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் துவக்கிய, ஆடிப்பெருவிழா, ஆண்டுதோறும், சுருங்கி, அரசுத்துறைகள் அரங்கு மட்டும் அமைக்கும், வெற்றுத்திருவிழாவாக மாறி விட்டது. திருப்பூர் மாவட்டம், கடந்த 2009ல், உருவாக்கப்பட்ட போது, மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமான திருமூர்த்திமலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆடிப்பெருந்திருவிழா: திருமூர்த்திமலை மற்றும் அமராவதியில், சுற்றுலாவை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் கோடை விழா நடத்த வேண்டும் எனவும் உடுமலை பகுதி மக்கள் சார்பில், தொடர் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, கோடை விழாவுக்கு மாற்றாக, ஆடிப்பெருந்திருவிழா என்ற பெயரில், மூன்று நாட்களுக்கு, விழா நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 2013ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், 2013ல், நடந்த விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு துறைகள் சார்பில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், விழா மேடையில் வழங்கப்பட்டன. அந்தாண்டு மூன்று நாட்கள், நடத்தப்பட்ட விழாவால், திருமூர்த்திமலைக்கு சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது, திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களும், அதிகளவு பங்கேற்றனர். விழாவையொட்டி, அப்பகுதியிலுள்ள மலைகிராம மக்கள், கடைகள் அமைத்து, பயன்பெற்றனர்.
திட்டங்கள் அறிவிப்பு: முதலாம் ஆண்டு நடந்த விழாவின் போது, பங்கேற்ற அமைச்சர்கள், திருமூர்த்திமலையில், சுற்றுலா மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களையும் அறிவித்தனர். குறிப்பாக, படகுத்துறை மேம்பாடு, அணைக்கரையில் பூங்கா உட்பட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல மாவட்ட சுற்றுலாப்பயணிகள் முன்பு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததால், உடுமலை சுற்றுப்பகுதி பாரம்பரிய கலைஞர்களும், பள்ளி மாணவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறு, பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், மகிழ்ச்சியாக நடந்த ஆடிப்பெருவிழா கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் குறையத்துவங்கியது.
சுருங்கியது விழா: சுற்றுலாத்துறை சார்பில், அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, அனைத்து பகுதியிலும் வினியோகிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், அவசரகதியில், அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கே, விழாவன்று, அழைப்பிதழ் கிடைக்கும் நிலைக்கு விழாவின் நிலை மாறியது. அவசர கதியான விழாவில், வருவாய்த்துறை மற்றும் இதர துறைகளின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக ஆடிப்பெருவிழா மாறியது. விழாவையொட்டி, அரசுத்துறைகள் சார்பில், அரங்குகள் அமைப்பது மட்டும் மாற்றப்படவில்லை. அத்துறைகள் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரங்குகளில் விளக்கமளிக்கப்படும் மனுநீதிநாள் போல விழா மாறியது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ஆடிப்பெருக்கின் போது, வழிபாட்டுக்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும். அன்றைய தினம், ஆடிப்பெருவிழாவை நடத்தி, பக்தர்கள் கூட்டத்தை, விழாக்கூட்டமாக காண்பித்து, பணியை மாவட்ட நிர்வாகம் முடித்துக்கொள்கிறது.
இந்தாண்டும், ஆடிப்பெருக்கன்று, திருமூர்த்திமலையில், ஆடிப்பெருவிழா நடத்த, வருவாய்த்துறை சார்பில், ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும், உடுமலை பகுதியின் சுற்றுலாத்தலங்கள் குறித்த, விழிப்புணர்வு கிடைக்கவும் துவக்கப்பட்ட விழா, தாலுகா அளவிலான மனுநீதிநாள் முகாம் போல மாறியது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.