பதிவு செய்த நாள்
02
ஆக
2017
12:08
மானாமதுரை: மானாமதுரையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட பொருட்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சீசனிற்கு தகுந்தாற்போல மண்பாண்ட பொருட்களை கலை நயத்தோடு தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 25ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே விநாயகர் சிலைகள் செய்யும் பணியை துவக்கி விட்டனர். செய்களத்துார், சுந்தர நடப்பு, கூலாங்குளம், கண்டனி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து மண் எடுத்து வந்து அவற்றை மானாமதுரை வைகை ஆறு வண்டல் மண்ணோடு சேர்த்து ஒன்றாக கலந்து அரை அடியிலிருந்து ஆறரை அடி வரை நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்காத களிமண் விநாயகர் சிலைகளை செய்து, பின்னர் அதனை சூளைகளில் பதமான வெப்பத்தில் சுட வைத்து சிலைகளுக்கு வர்ணம் பூசி விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கதிரேசன் கூறியதாவது: மானாமதுரையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் முற்றிலும் களிமண்ணால், நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, கோவில்பட்டி, கீழக்கரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தேவகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். அரை அடி சிலை ரூ.20க்கும், 8 இன்ஜ் ரூ.30க்கும்,1அடி ரூ.70க்கும், 1 1/2 அடி 250க்கும்,2 1/2 அடிசிலைகள் 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.