பதிவு செய்த நாள்
02
ஆக
2017
12:08
வீரபாண்டி: சுமங்கலி பெண்கள் வழிபாடு செய்யும், வரலட்சுமி விரத பண்டிகையை முன்னிட்டு, துளசிமாடம் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் ஆக., 4 வெள்ளியன்று, வரலட்சுமி விரத பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள் தோறும், துளசிமாடங்களை சுமங்கலி பெண்கள் அலங்கரித்து, கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று, நோன்பு கயிறுகளை வைத்து பூஜை செய்து வழிபடுவர். புதிதாக திருமணமானவர்கள் மற்றும் தங்கள் வீடுகளில் துளசிமாடம் இல்லாதவர்கள், துளசிமாடத்தை வாங்குவர். பழைய வீடுகளில், செங்கற்களால் பெரிய அளவில், நிரந்தரமாக கட்டப்பட்டிருந்த துளசிமாடங்கள் மட்டுமே உள்ளது. தற்போது, பெரும்பாலானோர் சிறிய வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருவதால், துளசிமாடங்களை அடிக்கடி இடம் மாற்ற வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சிறிய அளவிலான துளசி மாடங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து, சேலம், இரும்பாலை பகுதியில், துளசி மாடங்களை தயாரித்து, விற்பனை செய்து வரும் பழனிசாமி கூறியதாவது: துளசி மாடங்களை, மூன்று அளவுகளில் தயாரித்து, 250 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நான்கு புறமும் அகல்விளக்குகள் வைக்கும், விளக்கு மாடத்துடன் பல வண்ணங்களில் விற்பனைக்கு உள்ளது. வரலட்சுமி விரதத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், துளசி மாடங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.