பதிவு செய்த நாள்
03
ஆக
2017
12:08
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மகிஷாசுரமர்த்தினி அம்மன், சுந்தர விநாயகர் கோவில்களின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆகிய கோவில்கள், காலை, 6:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கோவில்களுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மூலவரை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், மதியம், 1:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தப்படுவதால், வெளியூர் பக்தர்கள், மூலவரை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து, மூலவரை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மதியம், இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தக் கூடாது என, கோவில் தக்கார், இணை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தும், மனுவும் கொடுத்தனர். பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, இந்து அறநிலையத் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் நடை தொடர்ந்து திறந்து வைப்பதற்கு அனுமதி பெற்றனர். இதனால், நேற்று முன்தினம் முதல், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இடைவெளி இல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.