பதிவு செய்த நாள்
18
ஆக
2017
11:08
பழநி: பழநி அருகே ஆயக்குடியில் வயல்வெளியில் ஏழாம் நூற்றாண்டு சப்த கன்னியர் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடிபகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் கன்னிமுத்து, வாஞ்சிநாதன், பேராசிரியர் அசோகன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆயக்குடியில் 7ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாராயணமூர்த்தி கூறியதாவது: புதுஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் தெற்குக்கரை அருகே வயல்வெளியில் சப்தகன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்தகன்னியர் தொகுப்பு சிலையில் கடைசி நான்கு தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியவற்றை ஒரேபலகை கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்த கன்னிமார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி ஆகியோரின் உருவங்கள் கிடைக்கவில்லை. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் உள்ளன. ஒரே பலகைக்கல்லில் 7 சிலைகளை வடிவமைக்கும்போது பலகை உடைந்திருக்கவேண்டும். அதனால் சிலைசெய்யும் பணியை கை விட்டுள்ளதும் தெரிய வருகிறது. வடிவியல் கோட்பாடு மூலம் ஆய்வு செய்ததில், வைஷ்ணவி, வராகி இடது கையில் சங்கு சக்கரமும், இந்திராணிக்கு கிரீட மகுடமும், பூணுால் நடுஇடுப்பை சுற்றியுள்ள வடிவமைப்பும் உள்ளது. இதன் மூலம் சப்தகன்னியர் சிலை 7ம் நூற்றாண்டு, அதாவது 1300 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்துள்ளது. சிலை உடைந்த காரணத்தால் அப்படியே வயல்வெளிப் பகுதியில் போட்டு விட்டனர். இதனை அரசு அருங்காட்சியகத்தில் வழங்க உள்ளோம்” என்றார்.