பதிவு செய்த நாள்
21
ஆக
2017
12:08
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது, 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பசுமை வழியில் விழாவை கொண்டாட, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது; இதற்காக, விநாயகர் சிலையுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, கிழங்கு மாவு, கல் மாவு, பழைய பேப்பர் பயன்படுத்தி, ரசாயன கலப்பற்ற வண்ணம் பூசி, விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப் படுகிறது. திருப்பூரை அடுத்த, அலகுமலை பகுதியில், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. கடந்த மாத இறுதியில், சிலை பணிகள் நிறைவடைந்தன. பகுதி வாரியாக சிலைகளை அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு அமைப்புகள், மரக்கன்று வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. இந்த அமைப்புகளின் பசுமை திட்டங்களுக்கு, மக்களிடையே வரவேற்பு உள்ளது. இந்து முன்னணியும், இவ்வாண்டு, பசுமையான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா நாளில், 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டு உள்ளனர். நேற்று, சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வின் போது, ஒவ்வொரு சிலைக்கும், ஐந்து மரக்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிளையை சேர்ந்த நிர்வாகிகள், அடுத்த ஆண்டு வரை, தண்ணீர் விட்டு, அவற்றை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.