பதிவு செய்த நாள்
28
ஆக
2017
11:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,மொச்சியூரணி பகுதியில் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 34 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டு பகுதியிலும், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, விநாயகர் சிலை அமைக்கப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டன. இந் நிலையில் நேற்று அந்தந்த வார்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் மதியம் 2 மணிக்குள் வழி விடு முருகன் கோயில் பகுதிக்கு ஆடல், பாடல், பக்தர்கள் கோஷங்களுடன் எடுத்து வரப்பட்டன.
அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டன. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகர் தலைவர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் ஆர்.மனோஜ்குமார், ஜே.சஞ்சீவி, நிர்வாகிகள் எம்.ராமர், பி.வீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் ஆ.ஆடலரசன் துவக்கி வைத்தார். அரு.சுப்பிரமணியன் பங்கேற்றார். மொச்சியூரணி பகுதியில் கொண்டு வரப்பட்டு அங்கு விநாயகரை விஜர்சனம் நிகழச்சி நடந்தது. பின் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஆர். கல்யாணராமன், இந்து முன்னணி மாநில பேச்சாளர்கள் கே.ரத்தினசபாபதி, கே.என்.கங்காதரன், மாவட்ட செயலாளர் கே.ராமமூர்த்தி, துணைத்தலைவர் ஆ.சரவணன் பேசினர். நகர் செயலாளர் எஸ்.செல்வக்குமார் நன்றி கூறினார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.