பதிவு செய்த நாள்
28
ஆக
2017
12:08
திருக்கழுக்குன்றம் : புதிதாக கட்டப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேசுமுகிப்பேட்டை, திருப்பூர் குமரன் நகரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. யாகசாலை பூஜை முடிக்கப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.முன்னதாக, 25ம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. தினமும் மாலை, பரத நாட்டியம் மற்றும் சிறப்பு பட்டிமன்றங்களும் நடந்தன.