பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
கோவிந்தவாடி: குரு பரிகார தலம் என, அழைக்கப்படும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், நாளை நடக்கவுள்ள குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை, வருவாய் துறை நிர்வாகம் செய்துள்ளது. கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் வளாகத்தில் நேற்று, காஞ்சிபுரம் வருவாய் கோட்ட ஆட்சியர் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ரமணி, டி.எஸ்.பி., முகிலன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. நாளை நடக்கவுள்ள குரு பெயர்ச்சி விழாவிற்காக, பல துறை அதிகாரிகளின் உதவியுடன் விரிவான ஏற்பாடுகளை செய்ய, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் விபரம்:
● கோவிந்தவாடி பல்லவன் மற்றும் சாய் ஆகிய நகர் பகுதிகளில், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்துவதற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
● கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பிற தெருக்களில், குப்பை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளிக்க உள்ளது
● கோவிலுக்கு முன் உள்ள தற்காலிக கடைகளை அகற்றி, வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
● கோவிந்தவாடி அகரம் வளைவில் இருந்து, கம்மவார்பாளையம் பேருந்து நிறுத்தம் வரையில், மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன
● சின்டெக்ஸ் டேங்க் மற்றும் டிராக்டரில் குடிநீர் வசதிகள் ஏற்பாடு
● வாகன நிறுத்தம் மற்றும் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் தற்காலிக கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும்
● ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு கண்காணிப்பில் இருப்பர்
● அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்
● காஞ்சிபுரம் - அரக்கோணம் வழித்தடத்தில், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
● கோவில் அருகே, மந்தவெளி பகுதியில் முக்கிய பிரமுகர்களின் வாகனம் நிறுத்துவதற்கும், காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது
● அசம்பாவிதங்களை தவிர்க்க, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன
● ஊருக்குள் பிற வாகனங்களை செல்வதற்கு அனுமதிக்காமல் இருக்க கூடுதல் காவலர்களை நியமிக்கப்பட்டுள்ளது
● தடையில்லாத மின் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், மின் தடை பிரச்னைகளை உடனடியாக செய்து முடிக்க மின் பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளது.