பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராணக்கதையை நினைவுபடுத்தும் வகையில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென, பாண்டிய மன்னன் உத்தரவிட்டார். வந்தி அம்மை என்ற மூதாட்டிக்கு உதவி செய்ய சிவபெருமான் கூலி ஆளாக வந்து, வந்தி அம்மையிடம் கூலியாக பிட்டு உணவை உண்டு வேலைக்கு சென்றதாக புராண கதை உள்ளது. இச்சம்பவம், ஆவணி மூல நட்சத்திரத்தில் நடந்ததாக கதையில் இடம் பெற்றுள்ளது. அதனை நினைவுப்படுத்தும் வகையில், கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில், சிவலோகநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேகம் நடந்தது. சிவலோகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மண் சட்டியில் மண்ணும், மம்பட்டியும் வைத்து வழிபட்டு, சிவன் கூலியாக வருவது போன்று சிவனடியார் ஒருவர் வேடம் அணிந்து, மண் பானையும், மம்பட்டியும் எடுத்து சென்று, மண்ணை போட்டு கரையை அடைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சிவலோநாதர் உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். இதையெடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.