தென்முகக்கடவுள் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் தென்புறத்தில் தனிச்சன்னிதியில் அருள்புரிவதைக் காணலாம். சில தலங்களில் இரண்டு தட்சிணாமூர்த்திகளும் அருள் புரிகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் பகவந்தனையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீழ்மங்கலம் என்னும் தலத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் எட்டு திசைகளிலும் அருள் புரிகிறார்கள் கிழக்கில் ஞான தட்சிணாமூர்த்தி, வடகிழக்கில் யோகபட்டாபிராம தட்சிணாமூர்த்தி தென்கிழக்கில் சக்தி தட்சிணாமூர்த்தி, தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி தென்மேற்கில் குரு, தட்சிணாமூர்த்தி மேற்கில் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி வடமேற்கில் ஆசிதட்சிணாமூர்த்தி; வடக்கில் ஸ்ரீவரத தட்சிணாமூர்த்தி என தரிசனம் தருகிறார்கள். இந்த எட்டு தட்சிணாமூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபடுவதால் எட்டுவித செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம். மேலும் கல்வி, புலமையில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.