பதிவு செய்த நாள்
18
செப்
2017
11:09
திருச்சி: மகா புஷ்கர விழா துவங்கி, ஆறாவது நாளான நேற்று, புரட்டாசி முதல் தேதி என்பதால், ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 12ம் தேதி முதல், காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடி, ரெங்கநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.
50 ஆயிரம் பேர் : நேற்று, புரட்டாசி முதல் தேதி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததாலும், ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம், காவிரியில் புனித நீராடினர். நேற்று கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், அம்மா மண்டபம் படித்துறை, மக்கள் வெள்ளத்தில் திணறியது. ரெங்கநாதர் கோவிலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரங்களில் தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரியில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு யாகம் : சேலம் மாவட்டம், மேட்டூர், எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரத்தில் உள்ள காவிரி கரையோரம், நேற்று மகா புஷ்கரம் கொண்டாடப்பட்டது. சேலம், ராஜ ராஜேஸ்வரி மஹிளா சமாஜம் யோகினி சிவாம்பா தலைமையில், யாகம் செய்து, காவிரிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.