மாலையில் திருவிளக்கேற்றி, அம்பாள் முன்னிலையில் இதனைப் படிப்பவர்கள் வாழ்வில் எல்லா வளமும், உடல்நலனும் பெறுவர்.
* சூரியனின் சிவந்த ஒளி போன்ற நெற்றித் திலகத்தைச் சூடியிருப்பவளே! நல்ல அன்பர்கள் போற்றுகின்ற மாணிக்கமே! மாதுளம்பூ போன்று செக்கச் சிவந்தவளே! மலரில் வீற்றிருக்கும் திருமகள் துதிக்கின்ற மின்னல் போன்றவளே! குங்குமம் போல் சிவந்த வண்ணம் கொண்டவளே! அபிராமி அன்னையே! நீயே எனக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். * படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை நிகழ்த்துபவளே! கொடி போன்ற இடையினைக் கொண்டவளே! அடியார்களுக்கு ஞானம் அருளும் மனோன்மணியே! ஜடாமுடியுடைய சிவபெருமான் பருகிய விஷத்தினை அமுதமாக்கிய பராசக்தி தாயே! தாமரை மலரை விட, மென்மையான உன் திருப்பாதங்களை அடியேனின் தலைமீது வைத்து அருள் செய்வாயாக. * தயிரைக் கடையும் மத்து எவ்வாறு சுழலுமோ, அதுபோல என் உயிரானது பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது. இதிலிருந்து என்னைக் காப்பாற்றி பிறவா வரம் தருவாயாக. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரும், நிலவைச் சூடி நிற்கும் சிவனும், மகாவிஷ்ணுவும் உன் சிவந்த திருப்பாதங்களை ஆராதனை செய்து போற்றும் போது, சாதாரண மனிதனான (மனுஷியான) நான் எம்மாத்திரம்? உன் பாதங்களில் சரணடைகிறேன். * எனது அறிவில் ஆனந்தமாக நிறைந்திருப்பவளே! நிலையான முக்தி இன்பத்தை உயிர்களுக்கு அருள்பவளே! நான்கு வேதங்களும் வியக்கும் ஆதியந்தப் பொருளே! உன் திருவடி தாமரைகளை பூஜித்து மகிழ்கிறேன். * பதினான்கு உலகங்களையும் உருவாக்கிக் காத்து, பின் உனக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்பவளே! நஞ்சை உண்ட நீலகண்டனுக்கு மூத்தவளே! இளமை பொருந்திய மகாவிஷ்ணுவின் தங்கையே! உன்னைத் தவிர எனக்கு இவ்வுலகில் வேறு அடைக்கலம் யாருமில்லை.