பதிவு செய்த நாள்
23
செப்
2017
01:09
துாத்துக்குடி மாவட்டம், குலசை முத்தாரம்மன் கோவிலில் துவங்கியுள்ள தசரா விழாவிற்கு, பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என்பதால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, முதல்வருக்கு, பல்வேறு தரப்பினர், கோரிக்கை விடுத்துள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இருந்து, 11 கி.மீ., துாரத்தில் குலசேகரப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்கு, புகழ்பெற்ற, ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் தசரா விழா, மிக பிரபலம். நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன், தசரா விழா துவங்கியது. பத்தாம் நாள் இரவு, 30ம் தேதி, மகிஷா சூரனை, அம்மன் வதம் செய்யும், சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த, பல்வேறு வேடமிட்ட பக்தர்கள், குடும்பத்தினருடன் குலசையில் குவிவர். பல லட்சம் பேர் குவிவர் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, இந்து மக்கள் கட்சி மாநில செயலர், வீரமாணிக்கம் சிவா, முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு: குலசை முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழாவில், 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். எனவே, கழிப்பறை, குளியல் அறை, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. அவற்றை போர்க்கால அடிப்படையில், செய்த தர வேண்டும். ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, சென்னை, கோவை மற்றும் இதர நகரங்களில் இருந்து, அரசு பஸ்களை அதிகம் இயக்க வேண்டும். சில ஆண்டுகளாக, தசரா திருவிழாவில், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, ஜாதி சங்கங்களின் கொடிகளுடன், ஜாதி சங்க தலைவர்கள் போல் வேடமிட்டு, சமூக விரோதிகள் சிலர் அச்சுறுத்துகின்றனர். இதனால், ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -