● தீப மங்கள ஜோதியாக கடவுள் திகழ்கிறார். அவரைப் போற்றும் விதமாக தீபாவளி திருநாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும். ● சிற்பத்தில் கல்லைக் கண்டால் அதன் உருவம் தெரியாது. உருவத்தைக் கண்டால் கல் மறைந்து போகும். அதுபோலவே, உலக வாழ்வில் மூழ்கி விட்டால் கடவுளை அறிய முடியாது. கடவுள் மீது ஈடுபாடு வந்து விட்டால், உலகம் தெரிவதில்லை. ● கடவுளை பற்றிச் சிந்திக்கும் நேரமே நம்முடைய நேரம். தர்மத்திற்காகச் செலவழித்த பணமே நம்முடைய பணம். ● முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக் கொள்ள வேண்டும். மறுமை வாழ்வுக்கு தேவையானதை இந்த பிறவியில் தேடிக் கொள்ள வேண்டும். ● உயிர் இருப்பதை உணர முடிந்தாலும், அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல கடவுளை உணரத் தான் முடியுமே தவிர, பார்க்க முடிவதில்லை. ● எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஆனால் நன்றி மறந்த பாவத்தை மன்னிப்பதில்லை. ● பறவை சிறகுகளை விரித்து உயரப் பறப்பது போல, கடவுள் பக்தி, மன அடக்கம் என்னும் இரு சிறகுகளை விரித்தால் மனிதனும் வாழ்வில் உயரலாம். - சொல்கிறார் வாரியார்