பதிவு செய்த நாள்
04
நவ
2017
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று, அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்ரவரர் ஆகியோருக்கு தலா, 150 கிலோ அரிசியில் சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்து, அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை. 6:01 மணி முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், 150 கிலோ அரிசியில் சாதம் செய்து, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி மதியம், 12:30 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை, காலை, 11:04 மணிக்கு நிறைவடைகிறது. இதனால், வெள்ளிக்கிழமை இரவு லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தூரம் பவுர்ணமி கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.