பதிவு செய்த நாள்
10
நவ
2017
12:11
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த கூத்தாண்டவர் திருவிழாவில், பெண்கள் ரத்த சோறு சாப்பிட்டு, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட் ரோட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு, ஒரு முறை, கூத்தாண்டவர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. காளிப்பேட்டை, பட்டுகோணாம்பட்டி, சின்ன மஞ்சவாடி, பெரிய மஞ்சவாடி, சாமியாபுரம் கூட்ரோடு, நடுப்பட்டி, ஆவராங்காட்டூர், மோட்டுப்பட்டி, சாலூர், எலந்தகொட்டப்பட்டி, நொனாங்கனூர், கோம்பூர் உட்பட, 25 கிராமங்களை சேர்ந்த மக்கள், கூத்தாண்டவர் திருவிழாவை நடத்துகின்றனர். கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் கூத்தாண்டவர் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், தேரில், சுவாமி சிலை நிலை நிறுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தலை இறக்குதல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். மாலை, 4:45 மணிக்கு ஆட்டுக்கிடாய் பலியிடப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அரவான் தலை வெட்டப்பட்டது. பின், சுவாமிக்கு பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் ரத்தம், பொங்கல் வைத்த சாதம், வெல்லம் ஆகியவற்றை கலந்து, ரத்த சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் சாப்பிட்டு, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவையொட்டி, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.