பதிவு செய்த நாள்
11
நவ
2017
01:11
கீழக்கரை: மரங்கள் நிறைந்த சோலையாய், கீச்சிடும் பறவைகளின் சப்தங்களுக்கு மத்தியில், நிசப்தமான தென்றல் தழுவும் கோயிலாக, வெளியூர் பக்தர்களுக்கு அடைக்கலமாக விளங்கி வருகிறது தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில். கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர். சாலையின் வளைவில், சற்று தள்ளி கம்பீரமாக காட்சி தருகிறது கோயில். கீழக்கரை அருகே உள்ள முனீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக டிரைவர் தியாகராஜன் சுவாமி. தீவிர முருக, ஐயப்ப பக்தராக விளங்கியவர். கடந்த 1987ல் அகத்தியருக்கு கோயில் அமைக்கப்பட்டது. வடமாநில கட்டடக் கலையின் அடிப்படையில், அகத்தியர் நின்ற நிலையில் ஒரு கையில் கமண்டலமும், தண்டத்தோடும், மறு கையில் ஆசி வழங்கும் நிலையில் காட்சி தருகிறார்.
அகத்தியர் ஆசிரம மடாதிபதி ஸ்ரீமத் பத்மானந்த சரஸ்வதி சுவாமி கூறியதாவது: ஆலமரம், அரசமரம், வேம்பு, புளி உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ள சோலையாக விளங்குவதால், ராமேஸ்வரம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி செல்லும் யாத்ரீகர்கள் தங்கி, இளைப்பாறிச் செல்லும் இடமாக உள்ளது. சித்திரை மாதம் குருபூஜை விழா நடக்கும். வடமாநிலத்தில் இருந்து வரும் சன்னியாசிகள், சாதுக்கள் இங்கு 3 நாட்கள் தங்கியிருந்து விட்டு செல்கின்றனர். பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்குகிறோம். நவ அபிஷேக பரிகாரம்: தோஷ நிவர்த்தி பூஜையாக 9 கலசங்கள் வைத்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஊற்றப்பட்டு, சேதுக்கரை கடலில் நீராடி செல்கின்றனர். விநாயகர், நவக்கிரகம், அம்பிகை முருகனின் வேல், ஐயப்பன் சன்னதிகள் மற்றும் ஜீவ சமாதியும் உள்ளது. பக்தர்களின் குறைகளை தீர்க்கும் அகத்தியர் இப்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்குகிறார் என்றனர். தொடர்புக்கு: 98437 02473.