பதிவு செய்த நாள்
11
நவ
2017
01:11
மூவேந்தர்களில் சோழர்களின் அடையாளமாக இருந்த அத்திப்பூ மரம் ராமநாதபுரம் கோயில்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. சேரர்களுக்கு போந்தை எனும் பணம் பூவும், பாண்டியர்களுக்கு வேப்பம் பூவும், சோழர்களுக்கு ஆர் எனும் ஆத்திமாலையும் குடிப்பூ அடையாளமாக இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. இதில் அத்திப்பூ கண்ணியாகவும், மாலையாகவும் தொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னி சேரி, நிறைகுளத்து அய்யனார் கோயிலிலும் சித்தார்கோட்டை வீமாகாளி கோயிலிலும், தீயனூர் பகுதியிலும் கோயில் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை பல நூற்றாண்டு பழமையான மரங்கள் ஆகும். சொரசொரப்பான கோணலான சிறுமரம் ஆத்தி, இதன் இலைகள் இரண்டாக பிரிந்த மடல்களுடன் காணப்படும். வெளிறிய மஞ்சள் நிறப் பூக்கள் கொண்ட இவை மார்ச் மாதத்தில் பூத்து, ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை காய்க்கும் தன்மை கொண்டது. இதன் காய்கள் திருகலாகவும், வளைந்து தடுபோன்ற வடிவில் இருக்கும்.
இது குறித்த பாரம்பரிய தாவரங்கள் ஆய்வு செய்யும் வே.ராஜகுரு கூறியதாவது: வறண்ட முல்லை நிலக்காடுகளில் காணப்படும், இவை சுமார் 4 ஆயிரம் அடி உயரம் வரையிலான பகுதிகளில் வளரும் இயல்புடையது. ‘சீசல்பினாய்டியே ’ எனும் தாவரக்குடும்பத்தை சேர்ந்த இதன் தாவரவியில் பெயர் பாகினியாரசிமோசா, என சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களில் இது 67 வது மலர். நலங்கிள்ளி, பெருங்கிள்ளி என்ற இரு சோழ மன்னர்கள் ஒருவருடன், ஒருவர் போர் புரிந்த போது இருவரும் ஆத்தி மலரைச்சூடி இருந்ததாக கோவூர் கிழார் கூறுகிறார். அழகான ஆத்தி மாலையினை தலைமாலையாகச் சூடியவன் கரிகால் வளவன் என பொருநராற்றுப்படை கூறுகிறது. சோழ மன்னன் கோப் பெரு நற்கிள்ளி நரால் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும், இரவலர்க்கு வழங்கிவிடும் ஈகை திறன் உடைய வீரன், என சாத்தந்தையார் குறிப்பிடுகிறார். ஆத்தி மரத்தில் அம்பு எய்தி நார் உரித்துப் பயன்படுத்தியுள்ளனர். சோழன் ஆத்திமாலை அணிந்த மார்புடையன், என நற்றியில் பரணர் கூறுகிறார். இம்மரத்தின் பெயரால், ஆர்க்காடு, திருவாரூர், ஆர்ப்பாக்கம், ஆகிய ஊர்கள் உருவாகியுள்ளன. பல இடங்களில் இந்த மரங்கள் அழிந்து போன நிலையில் சில கோயில்களில் மட்டும் தற்போது காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால நாட்டுப்பிரிவுகளில் கீழ்ச் செம்பி நாடு, வடதலை செம்பிநாடு, ஏழூர் செம்பிநாடு, மதுராந்தக வளநாடு, போன்றவற்றின் மூலம் சோழ நாட்டுடனான தொடர்பு அறியப்படுகிறது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் வணிகம், நிர்வாகம், போன்ற பல காரணங்களுக்காக சோழ நாட்டு மக்களின் குடியேற்றம் இப்பகுதிகளில் நடந்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஆத்திமரம் இப்பகுதிகளில் வளர்க்கப்பட்டிருக்கலாம், என்றார்.