வைகாசி மாதத்தில், முழு மதியும் விசாக நட்சத்திரமும் கூடிய திருநாளே வைகாசி விசாகம் எனப்படும். முருகனின் அவதார நோக்கமே சூரபத்மனை அழிக்கத்தான். இது சூரபத்மன் பெற்ற வரத்தின் படியே நடந்ததாகும். அவதாரம் என்ற சொல்லுக்கு கீழே இறங்கிவருதல் என்று பொருளாகும். உலகில் அதர்மம் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும்போது, மக்களின் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஒரு உருவில் அவதரித்து நன்மை செய்வார். அப்படித்தான் முருகனும் சூரபத்மனை அழிக்க (ஆட்கொள்ள) அவதரித்தான். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்புண்டு. வைகாசி மாதத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் இதற்கு ஆன்மிக சிறப்புகள் பலவுண்டு. விசாகத் திருவிழா முருகன் கோயில்களில் மட்டுமல்லாமல் சிவன்கோயில்கள், அம்மன் கோயில்கள், வைணவ கோயில்கள் அனைத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
27 நட்சத்திரங்களில் விசாகம் 16 ஆவது நட்சத்திரம் மக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழத்தான் முருகன் விசாகத்தில் அவதாரமெடுத்தான். பெண் வயிற்றில் பிறக்காத ஆண் மகனால்தான் தனக்கு அழிவு நேரவேண்டும் என்று இயற்கைக்கு விரோதமாக வரம்பெற்றான் சூரபத்மன். இப்படி நடைபெற வழியில்லை என்ற ஆணவத்தில் 1,008 அண்டங்களை 108 யுகங்களாக ஆட்சிசெய்து உயிரினங்களை வதைத்தான். சிவபெருமான் சூரன் கேட்ட புதுமையான வரத்தின்படியே பெண் வயிற்றில் பிறக்கச் செய்யாமல் தன் ஆறுமுகங்களில் உள்ள நெற்றிக்கண் சுடரால் முருகனைத் தோற்றுவித்தார். ஆறுமுகனானவன் கந்தன், கடம்பன், கார்த்திகேயன், சரவணன், முருகன், விசாகன் குமரன் என்றழைக்கபட்டான். தக்கசமயம் வந்ததும் அவதார நோக்கத்தை சிவன் முருகனுக்கு எடுத்துக்கூறி தன் சக்திகள் அனைத்தையும் கொடுத்தார். பார்வதியும் தன் சக்திகளை ஒன்றினைத்து ஒரு வேலை உருவாக்கிக் கொடுத்தார். முருகன் திருச்செந்தூரில் சூரபத்மனை போரிட்டு அவனை ஆட்கொண்டான். அவன் உடலை இருகூறாக்கி ஒரு கூறு சேவல் மறுகூறு மயிலாக்கி கொண்டான். இங்கே அழித்தல் என்பது அருளன் என்றானதே சிறப்பு.