பதிவு செய்த நாள்
24
நவ
2017
11:11
ராமேஸ்வரம், குளிர்கால சீசன் யொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மலை போல் ஒதுங்கிய 5 டன் கடல் புல்களால் துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் அருவெருப்புடன் நீராடினார்கள்.குளிர்கால சீசன் நவ.,டிச.,ல் பாக்ஜலசந்தி கடலில் வீசும் சூறாவளி காற்றினால் கடலில் கொந்தளிப்பு, புயல் ஏற்படும். இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி கடலில் மழையுடன் ராட்சத அலைகள், கொந்தளிப்பு ஏற்படுவதால் பல நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல், படகுகளை கரையில் நிறுத்தி விடுவார்கள். இக்குளிர்கால சூறாவளியினால் வங்கம், பாக்ஜலசந்தி கடல் தரையில் வளரும் புல்கள், பாசிகள் பெயர்ந்து ராமேஸ்வரம் கடற்கரையில் டன் கணக்கில் கரை ஒதுங்கும். அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில், 5 டன்னுக்கு மேலாக ’கடல் புல்கள்’ ஒதுங்கியது. இதனால் அக்னி தீர்த்தத்தில் துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடினர். ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் வீரமுத்து குமார், நகராட்சி சுகாதார அலுவலர் அய்யப்பன் ஆகியோர் துப்புரவு ஊழியர்கள் மூலம் கரை ஒதுங்கிய கடல் புல்களை அகற்றி சுத்தம் செய்தனர்.