பதிவு செய்த நாள்
28
நவ
2017
12:11
பல்லடம் : கார்த்திகை மாத திங்கட்கிழமையான நேற்று, அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, 108 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் மிகவும் விசஷேமானவை. அந்த நாளில், சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று, பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி உடனமர் உண்ணாமுலை அம்மன் கோவிலில், 108 வலம்புரி சங்குகளால், சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை, 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, பஞ்சகவ்யம், மற்றும் கலச பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம், 18 வகை திரவிய ஹோமம், பூர்ணாகுதி, 16 வகை சிறப்பு அபிஷேகம், மற்றும், 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று மதியம், உலகேஸ்வர சுவாமி உடனமர் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.