Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் திருமழிசைப்பிரான் அருளிச்செய்த ...
முதல் பக்கம் » முதலாயிரம்
குலசேகரப்பொருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 டிச
2011
05:12

பெருமாள் திருமொழித் தனியன்கள்

உடையவர் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்-பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன், எங்கள்
குலசே கரனென்றே கூறு

மணக்கால் நம்பி அருளியது

கட்டளைக் கலித்துறை

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று, அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன், மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்
சேரன் குலசே கரன்முடிவேந்தர் சிகாமணியே கோன்

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

குலசேகரப்பொருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி

1. இருளிரியச் சுடர்மணிகள்

பகவானை சேவிப்பதும் அவனோடு இருந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். அவ்வாறே அடியார்களைக் காண்பதும் அவர்களோடு வாழ்வதும் சிறந்த செயல்களாகும். காவிரியின் இடையில் திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டிருக்கும் அழகிய மணவாளானை என்று சேவித்து மகிழ்வேனோ? அவனைக் கண்டு கண்கள் களிக்கும் நாள் எந்நாளோ? என் வாய் அவனை என்று வாழ்த்துமோ? என் தலை எப்போது அவனை வணங்குமோ? என் கைகள் மலரிட்டுத் தொழுதிடும் நாள் எந்நாளோ? அவனுடைய அடியார்களோடு கூடி மகிழ்வு எய்தும் நாள் எந்நாளோ? என்று கூறி அந்நாள் கிட்டவேண்டும் என்கிறார் குலசேகராழ்வார்.

அழகிய மணவாளன் விஷயம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!

647. இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே

பள்ளிகொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!

648. வாயோரீ ரைஞ்ஞாறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

அரங்கனடியார்களோடு நெருங்கி வாழ்வேனோ!

649. எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே

அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!

650. மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!

651. இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே

என் மனம் உருகும் நாள் எந்நாளோ!

652. அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே

அரங்கனைக் கண்டு அகம்நெகிழ்தல் எந்நாளோ!

653. மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

அரவணையானைக் கண்டு இன்பக்கலவி எய்துவேனோ!

654. கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே

திருவரங்கத்தில் துள்ளிப் புரளவேண்டும்

655. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே

அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?

656. வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே

நாரணன் அடிக்கீழ் நலமுற நண்ணுவர்

657. திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற்செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே

அடிவரவு: இருள் வாய் எம்மாண்பின் மாவினை இணை அளி மறம் கோல் தூராத வன்பெரு திடர்-தேட்டரு

2. தேட்டருந்திறல்

பகவானிடம் அன்பு கொண்டவர்கள் பாகவதர்களிடமும் (அவனடியார்களிடமும்) அன்பு கொண்டிருப்பார்கள். குலசேகரர், அடியார்களிடம் தமக்கு இருக்கும் அன்பு மிகுதியை ஈண்டு வெளிப்படுத்துகிறார்.

அழகிய மணவாளன் விஷயம்

சந்தக் கலி விருத்தம்

கண் பெற்ற பயன்

658. தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே

கங்கா ஸ்நானத்தைவிடச் சிறந்தது

659. தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே

தொண்டர் அடிச்சேற்றைச் சென்னியில் அணிவேன்

660. ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே

என் மனம் தொண்டர்களையே வாழ்த்தும்

661. தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன்
றாய்ச்சிகண்டு ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி
யார்களாய் நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்திஇன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே

தொண்டர்களை நினைத்து என் மெய் சிலிர்க்கிறது

662. பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே

தொண்டர்களையே என் மனம் பக்தி செய்யும்

663. ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே

அரங்கன் அடியாருக்கே அன்பு காட்டுவேன்

664. காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே

தொண்டர்களிடமே என் மனம் மயங்கியது

665. மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே

தொண்டர்கள் பித்தர்கள் அல்லர்

666. மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சிஎன்
அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே

அடியார்க்கு அடியார் ஆவர்

667. அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே.

அடிவரவு: தேட்டரு தோடு ஏறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி- மெய்யில்

3. மெய்யில் வாழ்க்கையை 

பரம பக்தரும், முடிவேந்தர் சிகாமணியுமான இவ்வாழ்வார் உலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கி அவ்வாழ்க்கையில் அரங்கனிடம் அன்பு கொண்டிருப்பது ஒன்றே சிறந்த செயல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

அழகிய மணவாளன் விஷயம்

கலி விருத்தம்

அரங்கனிடமே மயங்குகிறேன்

668. மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே

மாலிடம் மால்கொண்டேன்

669. நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

நான் அரங்கனின் பித்தன்

670. மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே

நான் அரங்கனின் பக்தன்

671. உண்டி யேயுடை யேயுகந் தோடும்இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே

தாமரைப் பேதை மணாளனின் பித்தன்

672. தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே

எம்பிரானுக்கே எழுமையும் பித்தன்

673. எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே

அத்தனே அரங்கா என்கின்றேன்

674. எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

பேயரே எனக்கு யாவரும்

675. பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

அரங்கனின் பக்தர்க்குத் துன்பம் இல்லை

676. அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு
சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே

அடிவரவு: மெய்யில் நூல் மாரனார் உண்டி தீதில் எம்பரத்தர் எத்திறத்திலும் பேயரே அங்கை-ஊன்.

4. ஊனேறு

திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே திருவேங்கடமலையில் நிற்கிறான். மனிதனாகப் பிறந்தவன் திருவேங்கடமலையின் சம்பந்தத்தைப் பெறவேண்டாமா? திருவேங்கடவன் விரும்பிவாழும் மலையன்றோ குளிரருவி வேங்கடம்! அம்மலையில் ஏரிக்கரையில் வாழும் நாரையாய்ப் பிறக்கமாட்டேனா! திருவேங்கடச் சுனையில் வாழும் மீனாக இருக்கமாட்டேனா! அம்மலையில் இருக்கும் சண்பக மரமாகவோ, புதராகவோ, திருமலையில் ஒரு பாகமாகவோ, அம்மலையில் பெருகும் காட்டாறாகவோ, மலைமேல் செல்லும் வழியாகவோ, அம்மலையில் உள்ள பொருள்களுள் ஏதேனும் ஒன்றாகவோ பிறக்கமாட்டேனா? திருவேங்கடவா! உன் சன்னதியில் ஒரு படியாக இருந்துகொண்டு உன் பவள வாயைச் சேவித்துக் கொண்டே இருப்பேன் என்று தம் ஆர்வத்தைக் கூறுகிறார் ஆழ்வார். 

திருவேங்கடமுடையான் விஷயம்

தரவு கொச்சகக் கலிப்பா

வேங்கடத்தே குருகாய்ப் பிறக்க வேண்டும்

677. ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கவேண்டும்

678. ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

வேங்கடவனுக்குப் பொன்வட்டில் பிடிக்கவேண்டும்

679. பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

வேங்கடத்தில் செண்பக மரமாய் இருக்கவேண்டும்

680. ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

வேங்கட மலையில் புதராக இருக்கவேண்டும்

681. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

வேங்கட மலையுள் சிகரமாக இருக்கவேண்டும்

682. மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே

வேங்கட மலையில் காட்டாறாக இருக்கவேண்டும்

683. வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

வேங்கட மலையில் உள்ள வழியாக இருக்கவேண்டும்

684. பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே

படியாகக் கிடந்து பவளவாய் காண்பேன்

685. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

அந்த மலையில் ஏதேனும் ஒரு பொருளாக ஆவேன்

686. உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

பகவானின் பக்தர்களாக ஆவர்

687. மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

அடிவரவு: ஊன் ஆனாத பின்னிட்ட ஒண் கம்பம் மின்வான் பிறை செடி உம்பர் மன்னிய-தரு

5. தருதுயரந்தடாயேல்

விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்விய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துவக்கோடு என்றும், திருமிற்றிக் கோடு என்றும் கூறுவர். விற்றுவக்கோட்டு அம்மானே! உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். நீ என் துன்பத்தை நீக்கா விட்டாலும், தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், அரசனின் கோல் நோக்கி வாழும் குடி போலவும் உன் அருளையே எதிர்பார்த்து ஏங்கி இருப்பேன்! உன்னிடமின்றி வேறு யாரிடம் செல்லமுடியும்? விசாலமான கடலில் செல்லும் கப்பலின் பாய் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் பறவையைப் போல் வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச் சரணடைகிறார்.

விற்றுவக்கோட்டம்மான் விஷயம்

தரவு கொச்சகக் கலிப்பா

தாயின் அருள்தான் சேய்க்கு வேண்டும்

688. தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே

நின் பெருமையையே நான் பேசுவேன்

689. கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே

உன் பற்று அல்லால் வேறு பற்றில்லை

690. மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே

அடியேன் உனதருளே பார்ப்பேன்

691. வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே

நான் எங்கு போய்ப் பிழைப்பேன் ?

692. வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

உன் சீர்தான் என் மனத்தை உருக்கும்

693. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே

என் சித்தத்தை உன்னிடமே வைப்பேன்

694. எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே

ஆறுகளெல்லாம் கடலினைத்தானே சேரும்?

695. தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே

அடியேன் நின்னையே வேண்டி நிற்பன்

696. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே

நரகத்தை அடைய மாட்டார்கள்

697. விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே

அடிவரவு: தரு கண்டார் மீன் வாளால் வெங்கண் செந்தழல் எத்தனை தொக்கு நின்னை விற்றுவக்கோட்டு-ஏர்

6. ஏர்மலர்ப்பூங்குழல்

கோபியர் கண்ணனின் வார்த்தையில் மயங்கினர். சொல்லியபடி கண்ணன் வரவில்லை. எனவே கண்ணனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெறுத்துக் கூறுகிறார்கள்.

ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்கல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

வாசுதேவா, உனக்காகக் காத்திருந்தேனே!

698. ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல ருள்ளவிவ் வூரில்உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே

நீ தயிர் கடைந்த விதத்தை நானறிவேன்

699. கெண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே

கண்ணா, உன் மாயை வளர்கிறது

700. கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே

கண்ணா, என்னை ஏமாற்றி விட்டாயே!

701. தாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே

கண்ணா! இங்கு ஏன் வந்தாய்?

702. மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே

முன்பு ஏமாற்றினாய்! இப்பொழுது ஏன் வந்தாய்?

703. மற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினை யேன்துயில் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெரு மான்நீ யெழுந்தருளே

இனி என்னை ஏமாற்ற வேண்டாம்

704. பையரவிண்ணைப்பள்ளியினாய் பண்டையோமல்லோம்நாம்  நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம் வைகியெம்சேரிவரவொழிந்
செய்யவுடையுந்திருமுகமும் செங்கனிவாயுங்குழலுங்கண்டு
பொய்யொருநாள்பட்டதேயமையும் புள்ளாவம் பேசாதேபோகுநம்பீ!

ஒரு நாள் வந்தால் என் சினம் தீர்ப்பேன்

705. என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே

குழைந்து குழலூதி வரமாட்டாயா?

706. மங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே

துன்பம் போய்விடும்

707. அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே

அடிவரவு: ஏர் கெண்டை கரு தாய் மின் மற்பொரு பை என்னை மங்கலம் அல்லி-ஆலை

7. ஆலை நீள்கரும்பு

மகனின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை இழந்த தேவகியாக இருந்துகொண்டு ஆழ்வார் அனுபவிக்கிறார்.

கண்ணா! என்னை உனக்குத் தாய் என்கிறார்கள். உலகில் உள்ள தாய்மார்களுள் நான் கடைசியாக இருப்பவள். பாக்கிய மில்லாதவள்! உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டவில்லை! நீ படுத்திருக்கும் அழகைக் காணவில்லை! உன்னுடைய இளம் பருவ இன்பத்தை நான் அனுபவிக்கவில்லை! உனக்குப் பால் பெற்றிலேன் திருவிலேன். எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே! என்று தேவகி புலம்புவது போல் ஆழ்வார் உள்ள முருகக் கூறுகிறார்.

சேய் வளர் காட்சியின்சீரை யசோதைபோல் தாய் தேவகி பெறாத் தாழ்வெண்ணிப் புலம்பல்

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தாய்மாருள் நான் கடையானவள்

708. ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

நீ மல்லாந்து கிடந்ததைக் காணப்பெற்றிலேன்

709. வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற்
கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ கேச வாகெடு வேன்கெடு வேனே

நந்தன் பெற்றனன் நல்வினை

710. முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் விரலி னும்கடைக் கண்ணினும்காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே

நின் இளமைப்பருவ இன்பத்தை இழந்தேன்

711. களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும்திண் டோளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே

எல்லாம் யசோதையே பெற்றாள்

712. மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே

நீ உண்ட உணவின் மிச்சம் எனக்குக் கிடைக்கவில்லை!

713. தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையா
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே

நின் திருக்கண் நோக்கத்தை இழந்தேன்

714. குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்! கோவிந்தா! என் குடங்கையில் மன்னி,
ஒழுகுபேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா,
மழலை மென்னகை இடிடை அருளா, வாயிலே முலை இருக்க, என் முகத்தே
எழில்கொள் நின் திருக் கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன், இழந்தேன்!

அசோதையே இன்பத்தின் இறுதி கண்டாள்

715. முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை தொல்லை யின்பத் திறுதிகண் டாளே

நின் விளையாட்டுக்களைக் காணப்பெற்றிலேன்

716. குன்றி னால்குடை கவித்ததும் கோலக் குரவை கோத்த தும்குட மாட்டும்
கன்றி னால்விள வெறிந்ததும் காலால் காளி யன்தலை மிதித்தது முதலா
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் காணு மாறினி யுண்டெனி லருளே

கண்ணா! நீ நல்ல தாயைப் பெற்றாய்!

717. வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே

நாரணன் உலகு நண்ணுவர்

718. மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுலகே

அடிவரவு: ஆலை வடி முந்தை களி மருவு தண்ணம் குழகன் முழுதும் குன்றினால் வஞ்சம் மல்லை-மன்னு

8. மன்னுபுகழ்

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சவுரிராஜனையே ஆழ்வார் இராமனாகக் குறிப்பிடுகிறார்.

கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு

தரவு கொச்சகக் கலிப்பா

கணபுரத்தின் கருமணியே! தாலேலோ!

719. மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

எண்திசையும் ஆள்பவனே! தாலேலோ!

720. புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ

சனகன் மருமகனே! தாலேலோ

721. கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.

வில்லுக்கு ஒருவனே! தாலேலோ

722. தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ

பரதனுக்கு நாடு தந்தவனே! தாலேலோ

723. பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ

சிற்றன்னை சொற்கொண்டவனே! தாலேலோ

724. சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ!

அயோத்தி மன்னனே! தாலேலோ

725. ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ

தேவர்க்கு அமுதம் அளித்தவனே! தாலேலோ

726. மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ

இலங்கையை அழித்தவனே! தாலேலோ

727. தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

யாவரையும் படைத்தவனே! தாலேலோ

728. தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

காகுத்தனின் பக்தர்கள் ஆவர்

729. கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.

அடிவரவு: மன்னு புண்டரிகம் கொங்கு தாமரை பார் சுற்றம் ஆலின் மலை தளை தேவரை கன்னி-வன்தாள்

9. வன்தாளினிணை

இராமன் வனவாசம் செய்யச் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்து வருந்தினான்; மனமிரங்கிப் புலம்பினான். அவன் புலம்பியவாற்றை ஆழ்வார் ஈண்டுப்பாடுகிறார். 

தனயன் கான்புகத் தசரதன் புலம்பல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்!

730. வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே

இராமா! வனத்தில் நீ எவ்வாறு நடந்தனையோ!

731. வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ எம்பெருமான் எஞ்செய் கேனே

கல் அணைமேல் துயில எப்போது கற்றாய்?

732. கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே

என் நெஞ்சம் பிளக்கவில்லையே!

733. வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

பாவி சொல் கேட்டேனே!

734. பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் எஞ்செய்கேன் அந்தோ யானே.

உயிரோடு உன்னை இழந்தேனே!

735. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே.

என் மகன் வனம் செல்லுதல் தகுமோ?

736. பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே

கைகேசீ! உனக்கு இதயமே இல்லையா?

737. பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே.

ஏழ்பிறப்பிலும் நின்னையே மகனாகப் பெறுவேன்

738. முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.

யான் இறக்கப் போகின்றேன்

739. தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.

தீய நெறியில் செல்லமாட்டார்கள்

740. ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே.

அடிவரவு: வன்தான் வெவ்வாயேன் கொல்லணை வாபோகு பொருந்தார் அம்மா பூ பொன் முன் தேன் ஏரார்ந்த-அங்கண்.

10. அங்கணெடுமதிள்

வால்மீகி முனிவர் இராமயணத்தில் இராம சரித்திரத்தைப் பரக்கக் கூறி அனுபவித்தார். இவ்வாழ்வார் இராமாயணத்தை ஈண்டுச் சுருக்கிக் கூறி அனுபவிக்கிறார்.

தில்லைநகர்த் திருச்சித்திர கூடமால் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சித்திரகூடத்தே எம்பெருமானை எப்போது காண்பேனோ!

741. அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றிவிண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.

இராமனே திருசித்திர கூடத்தான்

742. வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே.

சீதைக்காகச் சிலையிறுத்தவன் சித்திரகூடத்தான்

743. செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.

சித்திரகூடத்தானைக் கண்டோர்க்கு நிகரில்லை

744. தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.

இப்பூவுலகம் பாக்கியம் பெற்றது!

745. வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

சித்திரகூடத்தானைத் துதிப்பவரை யான் துதிப்பேன்

746. மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே.

சித்திரகூடத்தான் அடிசூடும் அரசே அரசு

747. குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே

இராம சரித்திரமே இன்னமுது

748. அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே.

இனித் துயரம் அடையோம்

749. செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே.

சித்திரகூடத்தானை நாள்தோறும் துதித்து வணங்குங்கள்

750. அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே.

நாராயணன் திருவடியைச் சேர்வர்

751. தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

அடிவரவு: அங்கண் வந்து செவ்வரி தொத்து வலி தனம் குரை அம்பொன் அன்று தில்லை- பூநிலாய

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.

 
மேலும் முதலாயிரம் »
temple news
பொது தனியன்கள் வடகலை ஸம்ப்ரதாயம் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன் ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய ... மேலும்
 
temple news
திருப்பாவைத் தனியன்கள் பட்டர் அருளிச்செய்தது நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம் ... மேலும்
 
temple news
திருச்சந்த விருத்தத் தனியன்கள் திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவைதரவு கொச்சகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar