பதிவு செய்த நாள்
09
டிச
2017
06:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடியே ஒன்பது லட்சத்து, 85 ஆயிரத்து 443 ரூபாயை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா, கடந்த நவ., 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 2ல் மஹா தீப விழா நடந்தது. தீபத்திருவிழாவை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். மறுநாள் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து, நேர்த்தி கடனாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தியிருந்தனர். இவற்றை எண்ணும் பணியில், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 52 உண்டியல்களை திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை எண்ணப்பட்டது. காணிக்கையாக, இரண்டு கோடியே, ஒன்பது லட்சத்து, 85ஆயிரத்து, 443 ரூபாய் இருந்தது. மேலும், 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த ஆண்டு தீப திருவிழாவில், ஒரு கோடியே, 74 லட்சத்து, 33 ஆயிரத்து, 537 ரூபாயும், 375 கிராம் தங்கம், 1,170 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.