பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
ஓசூர்: ஓசூர் ராஜகணபதி நகரில் உள்ள, வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த கடலைக்காய் திருவிழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரில், வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், கடலைக்காய் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 60 வது கடலைக்காய் திருவிழா, நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி ?ஹாமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கடலைக்காய்க்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வரசித்தி ஆஞ்சநேயருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. அதன் பின், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை, கோவில் கோபுரம் மீது தூக்கி வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரத்தில் மீது வீசப்பட்ட கடலைக்காய்களில், கீழே விழுந்தவற்றை மட்டும், பக்தர்கள் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து சென்றனர்.