தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2018 04:01
ராமேஸ்வரம்: தை அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்தனர். தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, மஹா தீபாரதனை நடந்தவுடன், பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் நீராடி வழிபாடு செய்தனர்.
இதேபோல், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. திருவள்ளுர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு , ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோருக்கு திதி கொடுத்தனர். தை அமாவாசை முன்னிட்டு உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவை பேரூர் படித்துறையில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.