பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
உளுந்துார்பேட்டை : பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் தை மாத அமாவாசை உற்சவம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுாரில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், தை மாதஅமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் சேர்ப்பிக்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் தலைமையில் மோகனசுந்தரம் குருக்கள், ராஜா குருக்கள், சின்னப்பா குருக்கள், ஜெயக்குமார் குருக்கள், கணேஷ் குருக்கள், சரவணன் குருக்கள், கார்த்திக் குருக்கள் ஆகியோர் யாக நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சேர்ப்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.