பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான மகா தரிசனம் நேற்று நடந்தது. விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா, கடந்த ஜன.,23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் நடந்தது. விழாவின் மிக முக்கிய நிகழ்வான, மகா தரிசனம் நேற்றிரவு நடந்தது. முன்னதாக காலையில், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம், டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இரவு, 9:00 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜவீதிகளிலும் சுவாமி உலா நடந்தது. அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடைந்தது. விடிய விடிய நடந்த நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் திருவிழா, இன்று நிறைவடைகிறது.