பதிவு செய்த நாள்
07
பிப்
2018
01:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.மீனாட்சி அம்மன் கோவி லுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், கோவில் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இ-மெயில் மூலம் மிரட்டல், கோவில் இணையதளம் முடக்கம் தொடர்பான வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், இதுவரை, அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், தீ விபத்து குறித்த வழக்கும், சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நேற்று, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில், அப்பிரிவு போலீசார், கோவில் கடை உரிமையாளர்களிடம் விசாரணையை துவக்கியுள்ளனர்.எத்தனை கடைகள் உள்ளன; கடைகளில் என்னென்ன பொருட்கள் இருந்தன; எத்தனை ஆண்டுகள் கடைகள் இயங்குகின்றன போன்ற விபரங்களை கேட்டு பதிவு செய்துள்ளனர். அதிகாரபூர்வமாக, டி.ஜி.பி., அறிவித்த பின், முழுமையான விசாரணை நடத்தப்படும் என, சி.பி.சி.ஐ.டி.,யினர் தெரிவித்தனர்.