பதிவு செய்த நாள்
07
பிப்
2018
01:02
மீனாட்சி கோயிலில் ஏற்கனவே மின்னல் தாக்கியது, மழை நீர் புகுந்தது, தற்போது தீ பிடித்துள்ளது. இதை எல்லாம் பார்க்கும் பஞ்சபூதங்களும் கோபமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நிலம், காற்று ஆகிய இரண்டு பூதங்களால் சேதம் ஏற்படமால் இருக்க தேவையான பரிகாரங்களை செய்ய வேண்டும். பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கல்யாண வீட்டார் கட்டணம் செலுத்திய பின், போலீஸ் அனுமதிக்கு பின், கோயிலுக்குள் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கோயிலுக்குள் அலைபேசியில் போட்டோ எடுக்கும் கூட்டத்தையும் பார்க்க முடிகிறது. வெறும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் போட்டோ போட்டு லைக் வாங்க நினைக்கும் இவர்களை போட்டோ எடுக்க அனுமதிக்கும் கோயில் நிர்வாகம், பத்திரிக்கை நிருபர், புகைப்பட கலைஞரை அனுமதிப்பது இல்லை.
பத்திரிகை புகைப்பட கலைஞர் படம் எடுக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்க வேண்டும். கமிஷனர் அலுவலகம் சென்று, விண்ணப்பம் எழுதி, அனுமதி வாங்கி வ ந்து படம் எடுக்க காலதாமதமாகும். அதுவரை அவசரமான கோயில் படங்களை எடுக்க முடியாது. இப்படி முட்டுக்கட்டை போடுவது ஏன்.பத்திரிகைக்கு அனுமதி அளித்தால் கோயிலுக்குள் ஏற்படும் சேதங்கள், குறைகளை அவ்வப்போது அவர்கள் செய்தி, படங்கள் மூலம் சுட்டிகாட்டுவர். இதனால், பேரிடர் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க முடியும். கோயில் நிர்வாகமும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்படும்.எனவே அடையாள அட்டை உள்ள நிருபர், புகைப்பட கலைஞரை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.கோயிலை பராமரிக்க கோயில் சொத்து ஒன்றே போதும், கோயில் கடை வாடகை அவசியம் இல்லை. அதனால், கோயில் கடைகளை முழுமையாக அகற்றிவிடலாம். கோயிலுக்குள் வீரவசந்தராய மண்டபம் போல பல பொக்கிஷங்கள் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. இதை எல்லாம் மீட்டு கோயிலை காக்க ஒரு உயர்மட்ட கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்.
- எஸ்.தர்மராஜ் சிவம்தல அர்ச்சகர் இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை.
கருவி மூலம் சோதனை: மீனாட்சி கோயிலில் பக்தர்கள் உடலில் தொட்டு போலீசார் சோதனை செய்வது தவறு. திருப்பதி, குருவாயூர் கோயில்களை போல பக்தர்களை தொடாமல் கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும். இக்கோயிலில் சித்தர்கள் பலர் அடங்கி இருப்பதாலும், கோயிலின் புனிதம் கருதியும் கோயில் சேவை பணிகளுக்கு ஆர்வமுள்ள பக்தர் குழுவை பயன்படுத்தலாம். வீரவசந்தராய மண்டப தொட்டி நந்திக்கு கீழே ஒரு சித்தர் அடங்கி இருப்பதால் தான் தீ அங்கே தீண்டவில்லை. கோயிலுக்குள் பத்திரிக்கையாளர்களை அனுமதித்தால் தான், உள்ளே உள்ள குறைகள் வெளியுலகிற்கு தெரியும். கோயிலின் அனைத்து பகுதிகளிலும் தேவாரம், திருவாசகம் ஒலிக்கச் செய்தால் பக்தர்கள் மனதில் ஆன்மிக உணர்வு பிறக்கும்.
- தி.சுரேஷ் சிவன், தமிழிசை அறிஞர், மதுரை.
தீ தடுப்பான்கள் அவசியம்: மீனாட்சி கோயிலுக்குள் முக்கிய இடங்களில் தீ தடுப்பான்கள் இருக்க வேண்டும். கோயிலுக்குள் தீ பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த வெப்ப நிலையை கண்டறிந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீ தடுப்பு கருவிகளை ஆங்காங்கே பொருத்த வேண்டும். இது போன்ற விபத்து நேரத்தில் தீ தடுப்பு கருவிகளை எப்படி இயக்க வேண்டும் என்று கோயில் ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும் பேரிடர் மீட்பு பயிற்சிகளை அளிக்கலாம். பாரம்பரிய பெருமை மிக்க மீனாட்சி கோயிலை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.
- எஸ்.எம்.விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர்(ஓய்வு),மதுரை.