பதிவு செய்த நாள்
07
பிப்
2018
01:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மதுரைக்கும், நெருப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என பழைய வரலாற்று சம்பவங்களை மேற்கொள் காட்டுகின்றனர் கோயில் பட்டர்கள்.அவர்கள் கூறியதாவது:மீனாட்சி அம்மனை பாண்டிய நாட்டின் ராணியாக்கி, உலகை ஆளும் மாதரசியாக்கியது, அவளது தந்தை மலையத்துவசன் மன்னன் வளர்த்த வேள்வி தீதான். இதன்பிறகே பாண்டிய தேசம் பேரரசு ஆனது.
கண்ணகியின் கற்புநெறியை உலகிற்கு உணர்த்தியதும் மதுரையை சூழ்ந்த நெருப்புதானே! சிவபெருமானின் செல்லப்பிள்ளை திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்ததை அறிந்து, சமணர்கள் அவர் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தனர். மன்னர் கூன்பாண்டியனை தீண்டிய வெப்ப நோயை போக்கி சைவத்தை நிலைநிறுத்தியதும் அந்த தீ தானே!.புரவிகள் (குதிரைகள்) எல்லாம் நரிகளாய் மாறிய ஆத்திரத்தில் மன்னர் அரிமர்த்தன பாண்டியன், கொடுந்தீக்கு இணையான அக்னி நட்சத்திர உச்சி வெயிலில், சுடுமணலில் மாணிக்கவாசகரை கட்டி கிடத்தி தண்டனை வழங்கியபோது அவரை காக்க வைகையில் வெள்ளம் வரச்செய்து, கரையை அடைக்கும் வந்தி கிழவியின் பணியாளராக புட்டுக்கு மண் சுமந்த லீலை புரிந்து, அதன் மூலம் நமக்கு திருவாசகம் எனும் தமிழ் வேதத்தை மாணிக்கவாசகர் வழங்கினார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்ட நக்கீரரை ஆட்கொண்டு, தன் ஞானக்கண் ஒளித்தீயால் தீண்டி, புனிதராக்கி கடைச்சங்கத்தின் தலைவராக்கினார் சிவபெருமான்.
மதுரையை ஆங்கிலேயர் ஆண்டபோது பிரிட்டிஷ் துரை ரோஸ் பீட்டரின் அன்பையும், மரியாதையையும் மதித்து, சிறு பெண் குழந்தையாய் மீனாட்சி அம்மன் வந்து, அவரை நள்ளிரவில் எழுப்பி மாளிகைக்கு வெளியே அழைத்துவந்தபோது, மின்னல் தீயினால் மாளிகை எரிந்து இடிந்தது. அதில் இருந்து காப்பாற்றினார் அன்னை மீனாட்சி.திருமலை நாயக்கரின் மந்திரி நீலகண்ட தீட்சிதர் மேல் மன்னர் சந்தேகம் கொள்ள, அதை போக்க தன் இரு கண்களை கற்பூர நெருப்பில் பொசுக்கிக் கொண்டதும், மன்னர் தவறை உணர்ந்ததும் மந்திரிக்கு கண் பார்வையையும் மீண்டும் அளித்தது அந்த சிவபெருமானின் லீலைதானே!இதுபோன்றுதான் தற்போது நடந்த தீ விபத்தும்! இவ்வளவு பெரிய தீ விபத்து நடந்தபோதும் தொட்டி நந்தியும், அணிவிக்கப்பட்ட பூ மாலையும் அப்படியே இருந்தது ஆச்சரியம். அதர்மங்களை அழிக்க சொக்கநாதன் செய்யும் திருவிளையாடல் என்றே நாம் கருதலாம். இவ்வாறு கூறினர்.