பதிவு செய்த நாள்
07
பிப்
2018
01:02
மதுரை மீனாட்சி கோயிலில் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பெருமை பேசும் பல பொக்கிஷ சின்னங்கள் நிரம்பியுள்ளது. அதன் அருமை, பெருமைகளை எல்லாம் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் தெரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும். சில தகவல்கள்...
* மீனாட்சி கோயிலில் விநாயகரின் அறு படை வீடுகளில், நான்காம் படை வீடு உள்ளது. (தெற்குகோபுரம், இலவச தரிசனம் செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர்)
* மீனாட்சி அம்மன் விக்ரஹம் மரகதக் கல்லால் ஆனது. அம்மன் கருவறையை 32 சிங்கம், 64 சிவ கனங்கள், 8 கல் யானைகள் தாங்கி நிற்கிறது.* சுவாமி சன்னதியில் உள்ள சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். கருவறை விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. அதற்கு அடையாளமாக விமானத்தில் இந்திரனின் வெள்ளை யானைகள் இருக்கிறது.
* உலகிலேயே சிவனின் திருவடி, திருமுடி (பிட்டுக்கு மண் சுமந்த போது) பட்ட ஒரே தலம் மதுரை தான்.* உலகிலேயே ஐந்து வாசல்கள் உள்ள ஒரே கோயில் மீனாட்சி கோயில் தான். (கிழக்கில் இரண்டு வாசல் உள்ளது). மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளது, தெற்குகோபுரம் மட்டும் 160 அடி உயரம்.* மீனாட்சி கோயில் ஒரு சிவ தலம். கோபுரங்களில் சிவ சிவா என்று இருப்பதே அதற்கு சாட்சி.
* கோயில் உள் பிரகாரங்கள் மற்றும் கோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோடி சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கு கோபுரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதைகள் உண்டு.* இக்கோயிலின் தல விருட்சமான கடம்ப மரம் மேற்கு கோபுர வாசலில் உள்ளது.* தெற்கு, கிழக்கு வாசல் வழி வந்தால் மட்டுமே கோயிலுக்குள் நேரடியாக வரமுடியும். வடக்கு, மேற்கில் நுழைந்தால் ஆடி வீதியை சுற்றித் தான் உள்ளே வரமுடியும்.* பொற்றாமரைக் குளம் என்ற பெயருக்கு ஏற்ப தங்கத் தாமரை இங்கு உள்ளது.
* சுவாமி சன்னதி பகுதியில் உள்ள துர்க்கை சன்னதி அருகே கோயிலில் சிவனே வல்லப சித்தர் என்ற பெயரில் சித்தராக உள்ளார்.* ஆண்டிற்கு 300 நாட்களும் கோயிலில் ஏதாவது ஒரு விழா இருக்கும். மீதமுள்ள 65 நாட்களில் கூட விழா ஏற்பாடுகள் தான் நடக்கும்.இது ஒரு புதன் தலம் என்பதால் சொக்கநாதரை புதன் கிழமை தியானம் செய்து வழிபடுவது நல்லது.
* வீரவசந்தராய மண்டபம் 1611ம் ஆண்டு கட்டப்பட்டது. தொட்டி நந்தி சிற்பம் இரண்டு ஆயிரம் ஆண்டு பழமையானது.* பொற்றாமரை குளத்தின் கிழக்கில் இருந்து பார்த்தால் அம்மன், சுவாமி சன்னதி என இரண்டு தங்கக் கோபுரங்களை பார்க்கலாம். அஷ்ட சக்தி, மீனாட்சி நாயக்கர், முதலி, ஊஞ்சல், கம்பத்தடி, கிளிக் கூட்டு, மங்கையர்கரசி, சேர்வைக்காரர் போன்ற மண்டபங்கள் உள்ளன.
* வடக்காடி வீதியில் ஐந்து மற்றும் ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசைத் துாண்கள் உள்ளது.* இந்த கோயிலில் மட்டும் இடது காலை ஊன்றி, வலது காலை துாக்கி ஆடும் நடராஜரை காணலாம்.
* கிழக்கு கோபுரம் எதிரில் உள்ள புதுமண்டபத்தில் 124 சிற்பத்துாண்கள் உள்ளன.* சித்திரை திருவிழா, முடிசூட்டுதல், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
* சுவாமி சன்னதி பிரகாரங்களில் 64 திருவிளையாடல் சிற்பங்கள் உள்ளன.* 51 சக்தி பீடத்தில் மீனாட்சி கோயில் ராஜ மாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கப்படுகிறது.* தமிழகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் 366 கோயில்கள் உள்ளன, அதில் இது தான் முதல் கோயில்.* தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் இது 192வது கோயில்.
* நடராஜர் சன்னதி வெள்ளியம்பலம் என்பதால் சன்னதி முழுக்க வெள்ளியால் செதுக்கப்பட்டுள்ளது.* சிவனின் 64 சிவ வடிவங்களையும் சுவாமி சன்னதி எதிரில் உள்ள கொடிமர நந்தி மண்டபத்தில் பார்க்கலாம்.
* நான்மாடக் கூடல், ஆலவாய், கடம்பவனம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது.மீனாட்சி கோயிலில் இது போல இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அதன் மகத்துவம் உணர்ந்து கோயிலை நம் கண்போல காக்க வேண்டும்.