பதிவு செய்த நாள்
07
பிப்
2018
03:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்.,2ல் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நாங்கள் சொல்லும் வரை கடையை திறக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்த நிலையில், வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கடை உரிமையாளர்களுக்கு நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.
இக்கோயிலில் பல தலைமுறைகளாக சிலர் கடை நடத்தி வருகின்றனர். மொத்தம் 115 கடைகள் உள்ளன. வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகளில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீ விபத்தில் கருகின. இதனால் நாங்கள் சொல்லும் வரை கடைகளை திறக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதால், நேற்று வரை கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கடையை திறக்க அனுமதிக்குமாறு கோயில் நிர்வாக அதிகாரி நடராஜனை கடை உரிமையாளர்கள் சந்தித்தனர். அப்போது இம்மாத வாடகை பாக்கியை செலுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அவர் தெரிவித்தார்.இந்நிலையில், கடைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. குன்னத்துார் சத்திரத்திற்கு இடமாற தயாராக இருக்கும் தங்களையும் வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்கக்கோரி, மனு செய்ய கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிப்.,3 முதல் நேற்று வரை தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், தினமும் 2 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தீ விபத்தில் சிக்காத கடைகளில் என்னென்ன பொருட்கள் உள்ளன, கடைகள் எத்தனை ஆண்டுகளாக செயல்படுகின்றன போன்ற விபரங்களை தெரிவிக்குமாறு உரிமையாளர்களிடம் கோயில் நிர்வாகம் பட்டியல் கேட்டுள்ளது. கோபுரத்திற்கு கீழ் கடை வேண்டாம்புராதன சின்னங்களை காப்பது நமது கடமை என்பதை உணராமல், வருவாய்க்காக கோயில் கோபுரம் மற்றும் அம்மன் சன்னதி அஷ்ட சக்தி மண்டபத்திற்கு கீழ் தேங்காய், பழம், குங்குமம் விற்பனை கடைக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.இதனால் கோயிலுக்கு வருபவர்கள், கோபுர கட்டடக்கலை சிறப்புகளை ரசிக்க முடியவில்லை. பக்தர் ஒருவர் கோபுரத்திற்குள் நுழைந்தால் கடை எதுவும் இருக்க கூடாது.இதற்கு பதில் கோயில் நிர்வாகம் நடத்தும் பிரசாத ஸ்டால்களில் தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களையும் விற்க ஏற்பாடு செய்யலாம். இதுகுறித்து கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.