பதிவு செய்த நாள்
12
பிப்
2018
12:02
சென்னை : ஆழ்வார்பேட்டை, சங்கரா மினி அரங்கில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தி பஜார் எனும் பெயரிலான ருத்ராட்சம், பூஜை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் முதல், 21 முகம் வரையுள்ள ருத்திராட்சங்கள் இடம் பெற்றுள்ளன.ருத்ராட்சம் மகிமை குறித்து, பூம்புகார் நிறுவன முன்னாள் மேலாளர், சோமசுந்தரம் கூறியதாவது:ருத்ராட்சம், சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியது என, புராணம் கூறுகிறது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும், ஒரு குணம் உண்டு. ஒரு முகம், மூளையை திறமையாக பணியாற்ற செய்யும்.
ஏழு முகம், லட்சுமி கடாட்சத்தை குறிக்கும். 21 முகம், குபேரனை குறிக்கும். இந்திர மாலை என்பது, ஒரு முகம் முதல், 21 முகம் வரை கொண்டது. மாணவர்களுக்கு கல்வி தரும் சரஸ்வதி மாலை, ஆறு முகம் கொண்டது. 12 முக ருத்ராட்சம், சூரியனுக்கு உரியது. இதை பெரும்பாலும் அரசியல்வாதிகள் அணிவர். இவ்வாறு அவர் கூறினார். தியான மண்டபமும், கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மரகதம், மாணிக்கம், கோமேதகம் உள்ளிட்ட ராசிக் கற்களாலான, இறைவன் சிலைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 18ம் தேதி வரை நடத்தப்படும், இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:30 முதல், இரவு, 9:00 வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.