பதிவு செய்த நாள்
12
பிப்
2018
12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து, நேற்று, மூன்றாவது நாளாக கடைகளை அகற்றும் பணி தொடர்ந்தது. கோவிலில் உள்ள வீர வசந்தராய மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டு, மேற்கூரை சேதமானது. இது தொடர்பாக தாக்கலான வழக்கை, விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டது.
பக்தர்கள் செல்ல சிரமம் : இதன்படி, விபத்து நடந்த மண்டபத்தில் இருந்த கடைகளை உரிமையாளர்கள் அகற்றி வருகின்றனர். நேற்று, மூன்றாவது நாளாக கடைகள் அகற்றப்பட்டன. கடையை அகற்றியவர்கள், சேதமான பெட்டிகளை, புது மண்டபம் எதிரில் உள்ள நடைபாதையில் வைத்துள்ளனர். இதனால், பக்தர்கள் அந்த வழியாக நடந்து செல்ல சிரமப்பட்டனர். அறநிலையத் துறையினரின் மீட்பு பணிக்கு, இடையூறாகவும் ஆங்காங்கு அகற்றப்பட்ட பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர். கடைகளை முற்றிலும் அகற்றினால் மட்டுமே, மீட்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என, பொறியாளர்கள் தெரிவித்தனர். கடைகளை முழுமையாக அகற்ற, மேலும் இரு நாட்களாகலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூகோள ரீதியாக ஆய்வு : கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் ஏற்பட்ட தீயால், வீரவசந்தராய மண்டபம் சேதம் அடைந்தது. இதில், ஏழு கல் துாண்கள் சேதம் அடைந்துள்ளன. பழுது பார்க்கும் பணி நடப்பதால் கல் துாண்கள், சிற்பங்கள் சேதமடையாமல் இருக்க, தரையில் மணல் மற்றும் மணல் மூட்டைகள் பரப்பப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து தொழில்நுட்ப ஆய்வு நடத்தி, அறிக்கை வழங்க, மதுரை அட்லஸ் சர்வே கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திற்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று கீழச்சித்திரை வீதி, வீர வசந்தராய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், டோட்டல் ஸ்டேஷன் இயந்திரம் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். பொறியாளர் சரவணன் கூறுகையில், விபத்திற்கு முன் மண்டப உயரம், அதன் நிலை குறித்த விபரம், அறநிலையத் துறையிடம் உள்ளது. பழைய முறைப்படி மண்டபத்தை சீரமைக்க, தற்போதுள்ள நிலைகளை அளவீடு செய்கிறோம். பூகோள ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.