பதிவு செய்த நாள்
12
பிப்
2018
12:02
சேலம்: அழகிரிநாதர் - ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. பஞ்ச கருட சேவையைத் தொடர்ந்து, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை பூஜை, நாச்சியார் வைபம் தலைப்பில் உபன்யாசம் நடந்தது. தொடர்ந்து, அழகிரிநாதர், விசேஷ அலங்காரத்தில், கோவிலை சுற்றி ஊர்வலம் கொண்டுவரப்பட்டு, கல்யாண மேடையில் அமரவைக்கப்பட்டார். முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியிலிருந்து, கல்யாண சீர்வரிசையுடன், ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை கொண்டுவரப்பட்டது. அது, அழகிரிநாதருக்கு சாத்துபடி செய்யப்பட்டது. பின், ஆண்டாளுடன் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். மாலை, ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர், ஆண்டாளுடன் திருவீதி உலா வந்தார். அப்போது, மக்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.