பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில், கட்டுமான பணியின் போது, நடைபாதை தடுப்பு கற்கள் சரிந்து விழுந்துள்ளன. கடந்த, 2014ல், பாரம்பரிய நகரமாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, மின்விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்டவற்றுக்காக, மத்திய அரசு 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
பாரம்பரிய நகரம்: முதற்கட்டமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரத ராஜப் பெருமாள் ஆகிய கோவில்களின் வெளி பகுதி களில், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் மூலம், பணிகள் நடந்து வருகின்றன. வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றிலும், மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிள்கள் செல்ல தனி வசதியுடன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் சாலை, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 8.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கிழக்கு மாட வீதியின், இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு, தடுப்பு கற்களில், எஸ்.எஸ்., ஸ்டீல் எனப்படும், துருப்பிடிக்காத உருளை கம்பிகள் பொருத்தப்படுகின்றன. துாண்களின் அடித்தளம் தரமாக அமைக்காததால், மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, சில நடைபாதை தடுப்பு கற்கள், நேற்று முன்தினம் மாலை, திடீரென சரிந்து விழுந்தன. இதே தெருவில், வீடுகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் தடுப்பு கற்களின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கையால், லேசாக அசைத்தாலே அசைந்து விடுகிறது. இதனால், ஒட்டுமொத்த நடைபாதை தடுப்புச் சுவரின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆய்வு வேண்டும்: இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: தற்போது நடந்து வரும் பணிகள், பல ஆண்டுகளுக்கு பெயர் சொல்ல வேண்டும். ஆனால், அமைக்கும் போதே இடிந்து விழுந்துவிட்டது. அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், ஒப்பந்ததாரர், உறுதியாக அமைக்கவில்லை. இதனால் தான், கட்டிய உடனே இடிந்துள்ளது. பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.