பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
பந்தலுார் : பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில், கேதார்நாத், ராமேஸ்வர் சிவலிங்கங்களை தரிசித்த மக்கள் பரவசமடைந்தனர். தேவாலா பகுதியில் பிரம்மகுமாரிகள் சார்பில், ஆன்மிக கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், ஆன்மிகம் குறித்த பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், புகைப்படங்கள் மூலமும் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், கேதார்நாத், ராமேஸ்வர் ஆகிய பகுதிகளில் சென்று தரிசிக்க கூடிய சிவலிங்கங்களை இப்பகுதியில் பூஜிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரண்டு அறைகளில் கேதார்நாத் சிவலிங்கம் தனியாகவும், ராமேஸ்வரில் உள்ள சிவலிங்கம் தனியாகவும் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டது. மேலும், விஸ்வநாதர், திரியம்பகேஸ்வர், கிருஷ்ணேஸ்வர், சோமநாத, மல்லிகார்ஜூனா, ராமேஸ்வர், கைத்யநாத், பீமாசங்கர், நாகேஸ்வரர், மகாகாலேஸ்வரர், ஓங்காரேஸ்வரர் குறித்த புகைபடங்களும், அவைகளின் முக்கியத்துவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள் இந்த காட்சிகளை கண்டு பரவசமடைந்தனர்.