பதிவு செய்த நாள்
08
மார்
2018
10:03
சத்தியமங்கலம்: அரியப்பம்பாளையம், செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த, குண்டம் விழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சத்தியமங்கலம் அருகே, அரியப்பம்பாளையம் கிராமத்தில், செல்லாண்டியம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்கான குண்டம் விழா கடந்த மாதம், 20 இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில், கம்பம் நடும் விழா, 27 இரவு நடந்தது. கம்பத்திற்கு பெண்கள், தண்ணீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான, பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டம் விழா நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலையில் தீ மிதிக்கும் பக்தர்கள், பவானி ஆற்றில் குளித்தனர். பின்னர், ஈரத் துணியுடன் கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடி தீ குண்டம் முன் கூடினர். கோவில் பூசாரி, ஈஸ்வரன் குண்டத்திற்கு பூஜை செய்து, முதலில் தீ மிதித்தார். பின்னர், பக்தர்கள் வரிசையாக தீ மிதித்தனர். சில பக்தர்கள், குழந்தைகளை சுமந்தபடியும், பெண்கள், சிறுவர்கள், உள்ளிட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.