பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
01:04
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக, வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் கீழே உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவில், விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.தொடர்ந்து, மலை மீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்றப்பட்டு, பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், மலையடிவாரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடந்தது. அவருடன், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் சென்றனர்.இரவு, 9:00 மணிக்கு, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய விழாவாக, நாளை காலை, 6:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி மலைவலம் மற்றும், 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவம் நடைபெறும்.