சென்னை மாமல்லபுரம் சாலையில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்போரூர். இங்கு வைகாசி விசாக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் இங்கு பனைமரத்தடியில் புதைந்து கிடந்த முருகன் சிலையை மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமிகள் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தாராம். எனவே இந்நாளில் முருகன் எதிரே சிதம்பர சுவாமிகளை எழுந்தருளச் செய்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல் பாவனை செய்து வழிபடுவர். அன்று மாலையில் கருவறையில் முருகனுக்கு எதிரில் பெரும் அளவில் அன்னம் குவித்து தீபாராதனை நடத்துவர். இதற்கு அன்னப்பாவாடை நைவேத்யம் என்று பெயர். இந்த முருகன் சுயம்புவாகத் தோன்றியதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்தப்படும். முருகன் சிலையைக் கண்டெடுத்தபோது அது, பனைமரத்தில் செய்த பாத்திரத்தால் மூடப்பட்டு இருந்ததாம். இதை இன்னும் வைத்துள்ளனர். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல, இந்தப் பானை தரிசனம் செல்வத்தைத் தருவதாக ஐதிகம்.