பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
கம்ப ராமாயணத்தைப் போலவே, தெலுங்கில் மொள்ள ராமாயணம் மிகவும் பிரசித்தம். இதை இயற்றியவர் ஒரு பெண். அவர் பெயர் மொள்ள! இவர், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேசன் செட்டி. நெல்லூர், கோபவரம் என்ற ஊரைச் சேர்ந்த இவர், குயவர் குலத்தில் பிறந்தவர் என்றொரு கர்ண பரம்பரைச் செய்தி யுண்டு. இவருக்கு முன் தெலுங்கில் காவியம் இயற்றிய பெண்கள் எவரும் இல்லை. மொள்ள கல்வியிலும் கவிதை இயற்றுவதிலுமே மனதைச் செலுத்தினார். தந்தையும் இவரும் சிவலிங்கத்தை பூஜிப்பதையே விரதமாகக் கொண்டவர்கள். தமிழில் கம்பனும், தெலுங்கில் மொள்ளவும் பிறப்பால் சைவர்களாக இருந்தும், வைணவ இலக்கியமான ராமாயணத்தை பக்தி பூர்வமாக மொழிபெயர்த்தது அவர்களது பேருள்ளத்தைக் காட்டுகிறது. சம்சார பந்தத்திலோ, உலகியல் போக்கிலோ விரும்பிக் கலந்து கொள்ளாத இயல்புள்ளவர் மொள்ள. அதனால், அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. சிவபூஜையும் கவிதையுமே வாழ்வாகக் கொண்டிருக்கும் பெண்ணை ஊரார் நிம்மதியாக வாழ விடுவார்களா? தெருவில் செல்லும்போதெல்லாம் சிலர், அவரது காதில் விழும்படி, கிண்டல், கேலி செய்து பேசுவார்கள்.
ஒருமுறை, கையில் இரண்டு கோழிகளுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் வம்பர் கூட்டம் ஒன்றைத் தாண்டி வரவேண்டி இருந்தது. வம்பர்களில் ஒருவன் சிலேடையாக, “மொள்ளா, மொள்ளா! பெட்ட இஸ்தாவே?” என்று கேட்டான். ‘நி பெட்ட ’ என்றால் பெட்டைக் கோழி, அவரது கையில் கோழி இருக்கிறதல்லவா? பெட்டயைக் கொடுக்கிறாயா?’ என்பது ஒரு பொருள், ‘நீ என் மனைவி ஆகிறாயா?’ என்பது மற்றொரு பொருள். மொள்ள கோபிக்கவும் இல்லை; நிற்கவும் இல்லை. அவரும் சிலேடையாக, “நீகு அம்மனுரோய் ” என்று சொல்லிக்கொண்டே போய் விட்டார். ‘பெட்டயை உனக்கு விற்க மாட்டேன் ’ என்பது ஒரு பொருள். ‘உனக்கு நான் தாயடா!’ என்பது மற்றொரு பொருள். கேட்டவன், வெட்கிப் போனான். மொள்ள தனது காவியச் செய்யுள்களில், தான் இலக்கணம் படிக்கவில்லை என்றும், கோபவரத்து கண்ட மல்லேசனுடைய கருணையினாலும் ராமன், “ராமாயணம் பாடு ” என்று சொன்னதாலும் ராமாயணத்தை எழுதத் துணிந்ததாகவும் சொல்லுகிறார். போதனா முதலிய கவிஞர்களைப் போல் மிக விஸ்தாரமாகவோ வடமொழிச் சொற்களை நிரம்பச் சேர்த்தோ பாடவில்லை என்றாலும், சரளமாகவும் லட்சண சுத்தமாகவும் பாடியிருக்கிறார். சிலேடையும் உவமையும் இறுதி வரை விரவியிருக்கின்றன.
தேன் பட்டவுடனே நாவில் தித்திப்பு ஊறுவது போல், காவியத்தைப் படித்ததும் பொருள் விளங்க வேண்டும். ‘கடின பதங்களைக் கொண்டு இயற்றிய காவியம், வாய் பேசாதோர் படிக்க, காது கேளாதோர் கேட்பதற்காகவா? என்று கேட்கிறார் மொள்ள. இவருடைய ராமாயணம் வால்மீகி ராமாயணத்தை ஒட்டியதே. நாரதரிடம் வால்மீகி கதை கேட்பது போல அமைந்திருக்கிறது. ராமாயணம் முழுவதும் 824 பதிகங்களுக்குள் சுருக்கமாக அடங்கி விடுகிறது. இக்காவியத்தை ஸ்ரீராமனுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். தெலுங்கில் மொள்ள ராமாயணம் தவிர, பாஸ்கரர், ரங்கநாதர் ஆகியோர் எழுதிய ராமாயணங்களும் உள்ளன. இருந்தபோதிலும் பெரும்பாலான மக்களால் விரும்பிப் படிக்கப்படுவது மொள்ள ராமாயணமே!