சம்பாசுரன் என்பவன் தன்னை யாரும் கொல்லக் கூடாது என்றும், அப்படி கொல்ல முயன்றால் உடம்பில் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரனாக மாற வேண்டும் என்றும் சிவனிடம் வரம் பெற்றான். அதன்பின் ஆணவத்தால் அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். அசுரனை வதம் செய்ய சிவன், பைரவர் கோலத்தில் நாய் வாகனத்துடன் கிளம்பினார். திரிசூலத்தால் அசுரனைக் கொன்றார். சிந்திய ரத்தத்தை பைரவரின் நாய் குடித்ததால் அசுரர் உருவாவது தடுக்கப்பட்டது. அசுரனை வதம் செய்ததை ‘சம்பக சஷ்டி’ என பைரவர் கோயில்களில் கொண்டாடுவர்.