“எங்க மாமியாரால பெரும் பிரச்னையா இருக்கு. நீங்கதான் அந்தப் பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லி எப்படியாவது என் பிரச்னையைத் தீத்து வைக்கணும். இல்லாட்டா எனக்குத் தற்கொலை பண்ணிக்கறதை தவிர வேற வழியே இல்லை” மாமியார் கொடுமைகளைப் பட்டியல் இட்டாள் அந்த முப்பது வயதுப் பெண்மணி. இடுப்பை முறிக்கும் வீட்டு வேலை. தாய் தந்தையரைப் பார்க்க முடியாது. நிம்மதியாக வெளியூர் செல்ல முடியாது.அவளுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான். அன்று கோயிலில் அவ்வளவாகக் ட்டம் இல்லை. நல்ல தரிசனம். அன்னையிடம் எதையாவது கேட்க வேண்டும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை. கையில் கிளி தாங்கிய ஒரு கோலக்கிளிக்குக் காலம் முழுவதும் கொத்தடிமையாக இருக்கும் பேற்றை மட்டுமே வேண்டினேன். சன்னதியை விட்டு வெளியே வரும் போது ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள். “சிவன் சன்னதியை வலம் வருவதாக வேண்டுதல். தனியே செல்லப் பயமாக இருக்கிறது. கூட வர முடியுமா?” “மன்னிக்கவும் எனக்கு நேரம் இல்லை”
“அந்தப் பெண்ணின் பிரச்னையை முன்னிட்டு உனக்கு ஒரு ஆன்மிக வகுப்பு எடுக்கலாம் என்று இருந்தேன். நேரமில்லை என்கிறாயே.” மிக அருகில் குரல் கேட்டது. பச்சைப்புடவைக்காரியே தான். “தாயே நீங்களா? மன்னித்து விடுங்களம்மா.” “வா... சுவாமி சன்னதி பிரகாரத்தில் நடந்துகொண்டே பேசுவோம்.” அன்னை பேசப் பேச அவள் விவரித்த காட்சி என் கண்முன் விரிந்தது. இது நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.. அப்போது கிராமங்களில் கடிகாரம் வந்திருக்கவில்லை. சூரியனும், சேவலும் தான் காலம் காட்டும் கருவிகள். ஒரு குக்கிராமத்தில் ஒரு முதியவள் இருந்தாள். பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரி. அவளிடம் நூறு பேர் வேலை பார்த்தனர். எல்லோரும் கடுமையாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் கிழவியிடம் ஊதியம் பெற முடியும் என்ற நிலை, எல்லோரும் அலுத்துச் சலித்து இரவு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த முதியவள் ஒரு சேவல் வைத்திருந்தாள். சரியாக விடிகாலை நான்கு மணிக்கு அது சத்தமாகக் கூவும். கிழவி விழித்துக் கொள்வாள். உடனே கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு போய் பண்ணையாட்களை எழுப்பி விடுவாள். அவர்களும் வேண்டாவெறுப்பாக எழுந்து வேலை செய்ய ஆரம்பிப்பார்கள். அதன்பின் வேலை சரியாக இருக்கும். காலையில் கூழும் மதியம் கொஞ்சம் சோறும், காய்கறிகளும் தருவாள் கிழவி. மாலை பழைய சோறு.
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள் ஊழியர்கள். அதிகாலை நான்கு மணிக்கு கண் விழிப்பது கஷ்டமாக இருந்தது. அவர்கள் கூடி யோசித்தார்கள். அவர்களுக்குள் இருந்த ஒரு அதிமேதாவி சொன்னான்: “நம் பிரச்னைக்கு மூலகாரணம் அந்தச் சேவல்தான். அதைக் கொன்றால் போதும். கிழவி நம்மைக் காலையில் எழுப்பமாட்டாள். இஷ்டம் போல் தூங்கலாம்.” சேவலைக் கொல்ல கச்சிதமாகத் திட்டமிட்டு செய்தும் முடித்தனர். மறுநாள் நிம்மதியாகத் தூங்கலாம் என்ற அவர்களின் கனவு பலிக்கவில்லை. சேவல் இல்லாவிட்டால் நேரம் தெரியாதே என்ற பதைபதைப்பில் கிழவிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்த கிழவி, பணியாளர்களை இரவு இரண்டரை மணிக்கே எழுப்பிவிட்டாள். இன்னும் விடிய நீண்ட நேரமாகும் என்று அவர்கள் கெஞ்சியும், ‘தூங்குவதற்காகப் பொய் சொல்கிறீர்கள்’ என்றாள் கிழவி. நிலைமை முன்பை விட மோசமானது. தினமும் நான்கைந்து மணி நேரம் கூட தூங்க முடியாமல் தவித்தனர். கடைசியில் தங்கள் கையில் இருந்த காசை எல்லாம் ஒன்று திரட்டி கிழவிக்கு வேறு ஒரு சேவல் வாங்கிக் கொடுத்தனர்.“இந்தக் கதைக்கும் அந்தப் பெண்ணின் பிரச்னைக்கும் என்ன தொடர்பு, தாயே?”“ கதையில் வந்தவர்கள் தங்கள் பிரச்னைக்கெல்லாம் காரணம் சேவல் என்று நினைத்தது போல் இந்தப் பெண் தன் பிரச்னைக்கெல்லாம் காரணம் மாமியார் என்று நினைக்கிறாள். இவளது மாமியார் இறந்த பின், இவளுக்குப் பல பக்கங்களி லிருந்தும் பிரச்னை இன்னும் பூதாகாரமாக வரும். இவள் கர்மக்கணக்கை என்னால் முடிந்தவரை குறைத்து அதை மாமியார் வடிவில் அனுப்பி வைத்திருக்கிறேன். மாமியார் இல்லையென்றால் அதற்குப் பதிலாக வரும் பிரச்னைகளை இவளால் தாங்க முடியாது.”
“இருந்தாலும் அவள்படும் பாட்டைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது தாயே. எல்லாம் கர்மக்கணக்குதான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் மனது வைத்தால் ஏதாவது...” .“அவள் மனது வைக்கவேண்டும்” “என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்யச் சொல்கிறேன். வாரம் ஒரு முறை உண்ணாநோன்பு இருக்கச் சொல்லட்டுமா? தினமும் கோயிலை நூற்றியெட்டு முறை வலம் வரச் சொல்லட்டுமா? இல்லை அன்னதானம் செய்யச் சொல்லட்டுமா?” “அதெல்லாம் வேண்டாம். அவள் மாமியாரைத் தன் தாயாகப் பாவித்து அன்பைப் பொழியட்டும். அவள் மாமியாரும் நல்ல பெண்ணே என்றாலும் தன் மருமகள் மீது அவளுக்கு ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது. அதனால் தான் அவளைப்படுத்துகிறாள். மருமகள் தன் அன்பைப் பரிபூரணமாக வெளிப்படுத்தினால் மாமியார் மனதில் இருக்கும் சந்தேகம் போய்விடும். அதன் பின் தாயும் மகளுமாக ஆனந்தமாக வாழ்வார்கள். “அப்படி செய்யாமல் மாமியாரை எப்படியாவது தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற நினைத்தால் சேவலைக் கொன்றவர்கள் கதி தான் இவளுக்கும் ஏற்படும்.” “புரிந்தது தாயே.” அன்பு வழியைக் காட்டி கொடுத்த அன்பரசியை விழுந்து வணங்க முற்பட்டேன். அதற்குள் அவள் மறைந்து விட்டாள்.